இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமான டாடா குழுமம், பல்வேறு வணிகங்களை வெற்றிகரமாக செய்து வரும் ஒரு நிறுவனமாகும். இது மேற்கொண்டு தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக, அடுத்த 5 ஆண்டுகளில் 90 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் World Economic Forum meet-ல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நுகர்வு என்பது தொடர்ந்து வலுவாக இருந்து வருகின்றது. 10 வருடத்திற்கு முன்பு பார்க்கும்போது பொருளாதாரம் நல்ல நிலையிலேயே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேவை அதிகம்
ஸ்டீல், ஆட்டோ, மின்சார வாகனங்கள், புதுபிக்கத்தக்க எனர்ஜி, பேட்டரிகள். மின்சார பொருட்கள் உற்பத்தி என பலவற்றிற்கும் இடையே மிகப்பெரிய செலவினங்கள் என்பது உள்ளது. ஆக நாங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவிலான செலவினை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
பொருளாதாரம் எப்படி?
கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதார நிலையுடன் ஒப்பிடும்போது, தற்போது நல்ல வளர்ச்சியினை எட்டியுள்ளோம். அதிகளவிலான நுகர்வு என்பது உள்ளது. இது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் என பல பகுதிகளிலும் உண்டு. டயர் 1ல் தொடங்கி டயர் 4 வரையிலான நகரங்களில் மக்களின் விருப்பமான நுகர்வுகள் என்பது அதிகரித்துள்ளது.
மூன்று முக்கிய மாற்றங்கள்
தற்போது மூன்று உலகளாவிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒன்று செயற்கை நுண்ணறிவு, இரண்டாவது புதுபிக்கத்தக்க ஆற்றல், மூன்றாவது நெகிழ்வான சப்ளை செயின் ஆகும். இந்த அனைத்திலும் இந்தியா தனது பங்கினை அளிக்க தயாராகி வருகின்றது. வளர்ச்சியினை அதிகரிக்க தொழில் நுட்பத்தினை பயன்படுத்த முடியும் என்பதை நிறுவனம் நிரூபித்துள்ளது.
ஏற்றுமதி
நாம் உற்பத்தியினை அதிகரித்தால் அது ஏற்றுமதிக்கு வழிவகுக்கும். இந்தியா தற்போது உற்பத்தியினை பெருக்க பல்வேறு திட்டங்களை கொண்டுள்ளது. அதில் ஒன்று தான் பி எல் ஐ. இதில் உற்பத்தியாளர்களுக்கு ஊக்க சலுகைகள் கிடைக்கும். இதனால் முதலீடுகள் இந்தியாவில் அதிகரிக்கும். உற்பத்தியும் அதிகரிக்கும். இது மேற்கொண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும்.
பல்வேறு நடவடிக்கைகள்
தொடர்ந்து அரசு பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறை
ரயில்வே துறையில் கடந்த ஆண்டு முதலீடாக 23 பில்லியன் டாலராக இருந்தது. இது இந்த ஆண்டில் 26 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். ரயில்வே, நெடுஞ்சாலை மற்றும் பவர் டிரான்ஸ்மிஷன் போன்றவற்றிலும் இதே நிலை தான் உள்ளது. இது நாட்டின் நீண்டகால வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் மிகப்பெரிய வேலை வாய்ப்பினை உருவாக்கும்.