இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடையும் மாநிலங்களில் முதன்மையாக இருக்கும் தமிழ்நாடு அடுத்தடுத்து முதலீடுகளையும், நிறுவனங்களையும் ஈர்க்க பல முயற்சிகள் செய்து வருகிறது. இந்த முயற்சிகள் பலன் அளிக்கும் வகையில் அடுத்தடுத்து முதலீட்டுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் இந்திய அளவில் அடுத்த முக்கிய பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தளமாக பார்க்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டாடா குழுமம் தனது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அருகே பிரம்மாண்ட தொழிற்சாலையை அமைத்து தற்போது ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு அடுத்தகட்டமாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியிலேயே செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை அமைப்பதற்காக நிலத்தை தேடும் பணிகளையும், தேர்வு செய்யும் பணிகளையும் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் - வேந்தாந்தா கூட்டணியில் குஜராத் மாநிலத்தில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்வதற்கு பல காலாண்டு முன்பாகவே, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக விளங்கும் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமாக என் சந்திரசேகரன், இக்குழுமம் செமிகண்டக்டர் துறையில் இறங்கப்போவதாக தெவித்தார்.
டாடா குழுமம் அமைக்கும் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையில், வெளியில் இருந்து செமிகண்டக்டர்-ஐ வாங்கி அதை அசம்பிளி மற்றும் டெஸ்டிங் செய்ய உள்ளது. இதை utsourced semiconductor assembly & test (OSAT) யூனிட் என அழைக்கப்படுகிறது. டாடா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் ஒட்டுமொத்த சப்ளை செயின் துறையிலும் பணியாற்ற வேண்டும் என்ற முடிவில் உள்ளது.
TATA OSAT தொழிற்சாலை இந்திய எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு மிகவும் முக்கியமானது மட்டும் அல்லாமல் சீனாவுக்கு இணையாக வளர்ச்சி அடையும் வாய்ப்பு பெறுவதற்கான முதல் படியாக உள்ளது.
டாடா குழுமம் கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் தற்போது ஐபோன்-களின் உதிரி பாகங்களை இணைத்து ஒரு பகுதி போன்-ஐ மட்டுமே அசம்பிளி செய்து வருகிறது. முழு ஐபோன்-ஐ தயாரிக்கும் பொருட்டு சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருக்கு அருகில் இருக்கும் விஸ்திரான் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலையை வாங்க திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தையில் தற்போது டாடா குழுமம் தீவிரமாக உள்ளது.
ஏப்ரல் மாதம் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இன்டெல் நிறுவனத்தை சேர்ந்த ரந்தீர் தாக்கூர் என்பவரை நியமிப்பதாக டாடா குழுமம் அறிவித்தது. இன்டெல் ஃபவுண்டரி சர்வீசஸ் தலைவராக இருந்தவர் ரந்தீர் தாக்கூர். டாடா குழுமம் செமிகண்டக்டர் சிப் ஃபேப்ரிகேஷன், பேக்கேஜிங் மற்றும் உற்பத்தியில் இறங்குவதற்கான முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க இவருடைய நியமனம் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.