டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியும் மற்றும் நிர்வாக இயக்குனராக மார்க் லிஸ்டோசெல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதெல்லாம் சரி, யார் இந்த மார்க் லிஸ்டோசெல்லா, இதற்கு முன் எங்கு பணியாற்றியவர். இது குறித்த முழு விவரங்களையும் பார்க்கலாம் வாருங்கள்.
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது புதிய தலைமை செயல் அதிகரியாகவும் மற்றும் நிர்வாக இயக்குனராகவும் மார்க் லிஸ்டோசெல்லாவை (Marc Llistosella,) நியமித்துள்ளது.
மார்க் அனுபவம் மிக்க தலைவர்
இவர் வருகின்ற ஜூலை 1, 2021 அன்று பதவியேற்க உள்ளதாகவும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன், மார்க்கை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மார்க் ஒரு அனுபவம் மிக்க வாகன வணிகத் தலைவராக உள்ளார். மேலும் வணிக ரீதியான வாகனங்களில் ஆழ்ந்த அறிவும் நிபுணத்துவமும் கொண்டவர்.
அனுபவம் அதிகம்
மார்க் லிஸ்டோசெல்லாவை ஒரு அனுபவம் மிக்க ஆட்டோமொபைல் எக்ஸிசியூட்டிவ் ஆவார். பல முன்னணி நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்தவர். சமீபத்தில் புசோ டிரக் மற்றும் பஸ் கார்ப்பரேஷனின் (Fuso Truck and Bus Corporation ) தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர்.
டைம்லர் இந்தியாவிலும் பணியாற்றிவர்
குறிப்பாக வணிகத்தினை மேம்படுத்துவதிலும், லாபத்தினை அதிகரித்ததிலும் முக்கிய பங்கு வகித்தவர். அதோடு டைம்லர் இந்தியா (Daimler India Commercial Vehicles Pvt Ltd) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றியவர். இதே 2012ல் பாரத்பென்ஸை (BharatBenz) தொடங்கினார். இது குறுகிய காலத்தில் வெற்றிகரமான பிராண்டாகவும் மாறியது.
கல்வித் தகுதி
முன்னணி வணிக மற்றும் விற்பனையில் லிஸ்டோசெல்லாவுக்கு நீண்ட அனுபவம் உண்டு. மேலும் சந்தைபடுத்தல் மற்றும் நெட்வொர்க் மேனேஜ்மென்ட் உள்ளிட்டவற்றிலும் நல்ல அனுபவம் உண்டு.
லிஸ்டோசெல்லா தனது கல்லூரி படிப்பினை கொலோன் பல்கலைக்கழக்கத்தில் முடித்தார். ஆக இப்படி பல திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள மார்க், டாடா மோட்டார்ஸினை இன்னும் மேலே கொண்டு செல்வார் என்றும் டாடா மோட்டார்ஸின் தலைவர் கூறியுள்ளார்.
மிக்க மகிழ்ச்சி
இதே லிஸ்டோசெல்லா டாடா மோட்டார்ஸில் தனது நியமனம் குறித்து கூறுகையில், டாடா குடும்பத்தின் ஒரு அங்கமாக நான் மிக மகிழ்ச்சியடைகிறேன். பல் ஆண்டுகளாக இந்தியாவுடன் பிணைக்கப்பட்டுள்ள டாடா குழுமத்தின், ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது. டாடாவின் திறனை நாங்கள் அதிகரிப்போம் என்றும் கூறியுள்ளார்.
குண்டர் புட்ஷெக்
கடந்த 2016ல் டாடா மோட்டார்ஸ் முன்னாள் ஏர்பஸ் தலைமை இயக்க அதிகாரியான குண்டர் புட்ஷெக், இங்கு தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார். இவர் தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காக ஜெர்மனிக்கு இடம்பெயர உள்ளதாக கூறப்படுகிறது.