டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, இந்த பதவியினை வகிப்பார் என்று சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
சந்திரசேகரன் தலைமையிலான நிறுவனம் எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டது. அவரின் செயல்பாடுகள் குறித்து சில தினங்களுக்கு முன்பு நிர்வாக குழு கூட்டத்தில், டாடா குழுமத்தின் கவுரவ தலைவரான ரத்தன் டாடா பெருமிதமாக கூறினார்.
இந்த நிலையில் தான் சந்திரசேகரனின் பிரம்மாண்ட திட்டமும் வெளியாகியுள்ளது. அப்படி என்ன தான் சொன்னார், வாருங்கள் பார்க்கலாம்.
பிரம்மாண்ட திட்டம்
டாடா குழுமம் ஏர் இந்தியாவினை நிதி ரீதியாக தகுதியுடைய நிறுவனமாக மாற்றும். இது விமான சேவையினை மேம்படுத்தும். தொழில் நுட்ப சேவையினை மேம்படுத்தும். புதிய பல டெக்னாலஜிகளை பயன்படுத்தும். இது சர்வதேச அளவில் ஏர் இந்தியாவினை மேம்படுத்தும் என்றும் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
பல மாற்றங்கள் வரும்
ஏர் இந்தியா ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய சந்திரசேகரன், விமான நிறுவனம் மீண்டும் சிறப்பானதொரு நிறுவனமாக இருக்க பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது. மிகப்பெரிய மாற்றம் இருக்கலாம். ஏர் இந்தியா சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் விரிவாக்கம் செய்யும். ஏர் இந்தியாவினை உலகின் ஒவ்வொரு பகுதியுடனும் இணைக்க விரும்புகின்றது.
விருப்பமான ஒரு பிராண்டு
ஏற்கனவே தாஜ் ஹோட்டல், தனிஷ்க், ஜாகுவார், லேண்ட் ரோவர் உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகள் மூலம் 60 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை தொட்டுள்ளது, இந்த நிலையில் ஏர் இந்தியாவும் மக்களுக்கு விருப்பமான ஒரு பிராண்டாக இருக்கும். ஏற்கனவே ஏர் இந்தியாவின் புதிய நிர்வாகம் புதிய 4 பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. இந்த துறைகளை மேம்படுத்தும்.
நவீன மயமாக்குவோம்
நாங்கள் தொழில் நுட்பத்தினை மேம்படுத்துவோம். நவீன படுத்துவோம். புதிய எல்லைகளையும் விரிவுபடுத்துவோம். விமானங்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்போம்.
விண்ணை ஆளலாம்
கடன் பிரச்சனையால் தத்தளித்து வந்த ஏர் இந்தியாவுக்கு ஏற்கனவே கணிசமான வாடிக்கையாளர்கள் உண்டு. இந்த நிலையில் தற்போது டாடாவும் கையும் இணைந்துள்ளது. நிச்சயம் ஏர் இந்தியா போதிய நிதி வசதியுடனும், தொழில் நுட்பத்துடன் விண்ணை ஆளலாம் என சந்திரசேகரனின் நம்பிக்கையான வார்த்தைகளில் அறிய முடிகிறது. அரசு நினைத்ததைபோலவே ஆயிரக்கணக்கானோரின் வேலையும் பாதுகாக்கப்பட்டுள்ளது.