ஏர் இந்தியா நிறுவனத்தினை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா குழுமத்தின் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்று பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர் இந்தியாவினை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தினை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகின்றது.
எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மீண்டும் டாடாவின் வசம்
அப்படி டாடா குழுமமானது ஏர் இந்தியாவினை கைபற்றினால், 67 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் டாடாவின் வசமே செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய விமான போக்கு வரத்து நிறுவனமான, ஏர் இந்தியா பலத்த கடன் பிரச்சனைகளுக்கு மத்தியில் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான் இந்த நிறுவனத்தினை விற்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வந்தது.
கொரோனா காரணமாக தாமதம்
எனினும் கொரோனா பெருந்தொற்று காரணமாக, ஏர் இந்தியா ஏலமானது தள்ளிபோனாது. எனினும் கடந்த சில மாதங்களாக தொற்றின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், அரசு தீவிரமாக ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் 15 அன்று ஏர் இந்தியா ஏலத்திற்கான கடைசி தேதியாகவும் அறிவிக்கப்பட்டது.
தேசிய மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா
ஆரம்பத்தில் டாடா குழுமம் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், இறுதியில் ஏர் இந்தியாவை வாங்க விண்ணப்பித்தது. இந்த நிலையில் தான் தற்போது ஏர் இந்தியாவின் ஏல திட்டத்தினை மத்திய ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1932ம் ஆண்டு டாடா குழுமத்தினால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியாவை, மத்திய அரசு 1953ல் தேசிய மயமாக்கியது குறிப்பிடத்தக்கது.
பெரும் கடன் பிரச்சனை
நீண்ட காலமாக மிகப்பெரிய அளவிலான கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம், தொடர்ந்து சில ஆண்டுகளாக பெருத்த நஷ்டத்தினை மட்டுமே கண்டு வந்தது. இதனை மேலும் அதிகரிக்கும் விதமாக கொரோனாவினால் மேலும் பலத்த நஷ்டத்தினை கண்டது. ஆரம்ப காலத்தில் கணிசமான பங்குகளை வைத்துக் கொண்ட விற்க முற்பட்ட நிலையில், யாரும் ஏர் இந்தியாவை வாங்க முன் வராததால், பின்னர் முழுமையாக விற்கும் முடிவுக்கு வந்தது.
தினசரி நஷ்டம்
குறிப்பாக சொல்லவேண்டுமானால் அரசுக்கு தினசரி 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட வருவதாகவும், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தற்போது 70,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளை ஏர் இந்தியாவின் பங்குகளை விற்க அரசு போராடி வந்தது.
டாடா குழுமம் ஏற்கனவே ஏர் ஏசியாவில் 51% பங்குகளை வைத்துள்ள நிலையில், தற்போது ஏர் இந்தியாவினை வாங்கினால் இந்தியா விமானத் துறையில் மீண்டும் தனது காலடியை எடுத்து வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.