இந்திய அரசுக்கு சொந்தமான விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா-வை கைப்பற்றிய டாடா குழுமத்திற்கு வங்கி உத்தரவாதம் மற்றும் ஏர் இந்தியா சேவைகளை விரிவாக்கம் செய்ய, ஏர் இந்தியாவைக் கைப்பற்றிய Talace நிறுவனம் ஒரு வருடத்திற்கு 23,000 கோடி ரூபாய் கடனை ஏர் இந்தியாவுக்கு ஏற்கனவே கடன் கொடுத்த வங்கிகளிடம் கோரி இருந்தது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் டாடா-வின் டேலெஸ் நிறுவனத்திற்கு 35,000 கோடி ரூபாய் கடனை ஒரு வருடத்திற்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாடா-வின் டேலெஸ்
டாடா-வின் டேலெஸ் முதல் கோரிய 23,000 கோடி ரூபாய் கடனில் 18,000 கோடி ரூபாயை ஏர் இந்தியாவின் கடனை அடைக்கவும், மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய நிதி தொகைக்கும், மீதமுள்ள 5,000 கோடி ரூபாய் கடன் ஏர் இந்தியாவை இயக்குவதற்குத் தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்குவதற்காகவும் கோரியிருந்தது.
வங்கிகள் தாராளம்
தற்போது ஏர் இந்தியா-வை டாடா மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளதாலும், ஏர் இந்தியா மூலம் சிறப்பான வர்த்தக வளர்ச்சியை அடைய முடியும் என்பதாலும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் டேலெஸ் நிறுவனம் கேட்டதை விடவும் அதிகப்படியான கடனை கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
35,000 கோடி ரூபாய் கடன்
இதுமட்டும் அல்லாமல் வங்கிகள் தற்போது டாடா குழுமத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள 35,000 கோடி ரூபாய் கடனை வங்கிகளின் MCLR விகிதத்தை விடவும் குறைவு. அதாவது அடுத்த ஒரு வருடத்திற்கு வெறும் 4.25 சதவீத வட்டியில் வங்கிகள் கடன் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
4 வங்கிகள்
பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகிய 4 அரசு வங்கிகள் 12,000 கோடி ரூபாய் முதல் 3000 கோடி ரூபாய் வரையிலான கடனை அளித்துள்ளது.
ஏர் ஏசியா - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
டாடா குழுமத்தில் ஏற்கனவே இருக்கும் மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஏர் ஏசியா-வின் இந்திய பிரிவையும், பட்ஜெட் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியாவின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவையும் இணைக்க டாடா நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் இந்தியா
டாடா குழுமத்தில் இருக்கும் மற்றொரு விமானச் சேவை நிறுவனமான விஸ்தாரா-வை ஏர் இந்தியாவுடன் இணைக்கத் தற்போது டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கூட்டணி
ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் இந்தியா ஆகிய 3 விமானச் சேவை நிறுவனங்களும் இணைக்கப்பட்டால் நாட்டின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக இக்கூட்டணி உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.
கொச்சி விமான நிலையம்
தென்னிந்தியப் பகுதிகளிலேயே மிகவும் முக்கியமானதாக விளங்கும் கொச்சி விமான நிலையத்தில் ஓரே ஓரு விமானச் சேவை நிறுவனம் தான் பங்குகளை வைத்துள்ளது, அது ஏர் இந்தியா மட்டுமே. தற்போது ஏர் இந்தியா-வை டாடா குழுமம் வாங்கும் காரணத்தால் கொச்சி விமான நிலைய பங்குகளைத் தற்போது டாடா குழுமம் பெற உள்ளது.