இந்திய அரசின் பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா அதிகளவிலான கடனில் சிக்கித்தவித்து வருகிறது, மேலும் இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்த மத்திய அரசு பல ஆண்டுகளாக அதிகளவிலான நிதியுதவி செய்து வரும் நிலையிலும் வர்த்தகத்தில் பெரிய அளவிலான லாபம் ஏற்படவில்லை.
இதன் வாயிலாக ஏர் இந்தியா நிறுவனத்தையும் இதைச் சார்ந்த சொத்துக்கள் மற்றும் வர்த்தகத்தைத் தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தை வாங்கப் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றும் அளித்துள்ளது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா சோலோவாகக் களத்தில் இறங்கியுள்ளது.
டிசம்பர் 14
ஏர் இந்தியா விமான நிறுவனத்தைக் கைப்பற்ற விருப்ப விண்ணப்பம் அளிக்க டிசம்பர் 14ஆம் தேதி கடைசி நாளாக இருக்கும் நிலையில் டாடா நிறுவனம் தனியொரு நிறுவனமாக ஏர் இந்தியாவைக் கைப்பற்ற விருப்ப விண்ணப்பம் சமர்ப்பிக்க உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இதுகுறித்து டாடா எவ்விதமான தகவல்களையும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
விஸ்தாரா
டாடா குழுமம் தனது தனி விமானச் சேவை நிறுவனமான விஸ்தாரா மூலம் ஏர் இந்தியாவைக் கைப்பற்ற முடிவு செய்து கூட்டணி நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்ட நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக இல்லை முடியாத காரணத்தால் டாடா தனி ஆளாக ஏர் இந்தியாவைக் கைப்பற்றக் களத்தில் இறங்கியுள்ளது.
டாடா குழுமம்
டாடா தற்போது இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தாரா நிறுவனத்தையும், ஏர்ஏசியா நிறுவனத்துடன் இணைந்து ஏர்ஏசியா இந்தியா ஆகிய இரு நிறுவனங்கள் மூலம் விமானச் சேவையை அளித்து வரும் நிலையில் ஏர் இந்தியாவைக் கைப்பற்றுவதன் மூலம் டாடா சுமார் 23 சதவீத சந்தையைக் கைப்பற்றும்.
இந்திய சந்தை
விமானப் போக்குவரத்தில் சீனாவிற்கு அடுத்து வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கும் வேளையில் கொரோனா பாதிப்பு இந்திய விமானச் சந்தையின் வர்த்தகத்தையும் வளர்ச்சியும் பெரிய அளவில் பாதித்துள்ளது.
இந்தத் தருணத்தில் டாடாவின் முதலீடு எதிர்காலத்தில் சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தைக் கைப்பற்றுவதன் மூலம் சிறப்பான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி
டாடா - சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு மத்தியிலான பேச்சுவார்த்தை வெற்றிகரமான நிலையை அடையாத நிலையிலும் டாடா ஏர் இந்தியாவைக் கைப்பற்ற முடிவு செய்துள்ள நிலையில், அனைத்தும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் பின் நாளில் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் கூடுதல் முதலீடு செய்து கூட்டணி சேர வாய்ப்பு உள்ளது.