இந்தியாவின் மிகப்பெரிய ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இன்று தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ள வேளையில் லாபம், வருவாய், ஈவுத்தொகை எனப் பல முக்கியமான விஷயங்களை வெளியிட்டதோடு, ஊழியர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தையும் அறிவித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக டெக் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-ல் ஒவ்வொரு காலாண்டும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது தான் தொடர் கதையாகி இருந்தது.
இந்த நிலையில், முதல் முறையாகச் சுமார் 30 மாதங்கள் அதாவது 10 காலாண்டில் முதல் முறையாக டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
டெக் ஊழியர்கள்
2023 ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் பெரு நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமும் சேர்ந்துள்ளதா..? ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்தது ஏன்..?
டிசிஎஸ் ஊழியர்கள் எண்ணிக்கை
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை நடப்பு நிதியாண்டின் முந்தைய காலாண்டை ஒப்பிடுகையில் 2,197 பேர் குறைவாக உள்ளது.
10 காலாண்டு
பொதுவாக ஒவ்வொரு காலாண்டிலும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் 10 காலாண்டுக்குப் பின்பு 2022 ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது ஐடி சேவை சந்தையில் உருவாகியுள்ள மந்தமான டிமாண்ட் அளவை காட்டுகிறது.
2021 முதல் காலாண்டு
கடைசியாக டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை சேர்ப்பில் குறைந்தது 2021 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இக்காலகட்டத்தில் தான் இந்தியா கொரோனா தொற்றுக் காரணமாக ஒட்டுமொத்தமாக லாக்டவுனில் மூழ்கியது.
மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை
ஜனவரி 9 ஆம் தேதி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வெளியிட்ட காலாண்டு முடிவுகள் படி இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை டிசம்பர் 31 ஆம் தேதி முடிவில் 6,16,171ல் இருந்து 6,13,974 ஆகக் குறைந்துள்ளது.
2,197 பேர் சரிவு
டிசிஎஸ் செப்டம்பர் காலாண்டில் 9840 ஊழியர்களைப் பணியில் சேர்த்தது, ஆனால் 3வது காலாண்டில் 2,197 பேர் குறைந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ் 28,238 ஊழியர்களைச் சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மிலிந்த் லகாட்
இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரியான மிலிந்த் லகாட் கூறுகையில் புதிய ஊழியர்கள் சேர்ப்பதில் முதலீடுகளைக் குறைக்கப்பட்டு உள்ளதால் புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை 10 காலாண்டில் முதல் முறையாகச் சரிந்துள்ளது.
டிமாண்ட்
ஆனால் சந்தையில் ஐடி சேவைக்கான டிமாண்ட் அதிகமாகவே உள்ளது, மேலும் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவை உயர்த்தவும் இது முக்கிய நடவடிக்கையாக உள்ளது என டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரியான மிலிந்த் லகாட் தெரிவித்துள்ளார்.
இதன் உண்மை தன்மையைப் பிற முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மூலம் உறுதி செய்யலாம்.
டிசிஎஸ் லாபம், வருவாய்
டிசிஎஸ் நிறுவனம் டிசம்பர் காலாண்டு முடிவுகளில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாப அளவு 10.98 சதவீதம் அதிகரித்து 10,883 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வருவாய் 19.11 சதவீதம் அதிகரித்து 58,229 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் டிசிஎஸ் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 24.5 சதவீதமாக உள்ளது, இது - ஆண்டு அளவீட்டைக் காட்டிலும் 0.5 சதவீதம் குறைவாகும்.
டிசிஎஸ் ஈவுத்தொகை
டிசிஎஸ் டிசம்பர் காலாண்டு முடிவுகளில் சிறப்பு ஈவுத்தொகையாக 67 ரூபாய் சேர்த்து ஒரு பங்கிற்குச் சுமார் 75 ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. இதோடு டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 21.3 சதவீதமாக உள்ளது.