இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் 4.5 லட்ச ஊழியர்களுக்கும் வேலை இழப்புக் குறித்த பயம் வேண்டாம் என உறுதியாகக் கூறியுள்ளது.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகளைச் சமாளிக்கச் சில கடுமையான முடிவுகளையும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வு
கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் டிசிஎஸ் தனது 4.5 ஊழியர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில், யாரையும் பணிநீக்கம் மாட்டோம் என அறிவித்துள்ளது.
ஆனால் ஊழியர்களுக்கான இந்த வருடச் சம்பள உயர்வை முழுமையாக ரத்து செய்துள்ளது டிசிஎஸ் நிர்வாகம்.
40,000 ஊழியர்கள்
இதேபோல் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தற்போது புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்தும் முடிவை மறு ஆய்வு செய்து வரும் நிலையில் டிசிஎஸ் தற்போது பணி நியமனம் ஆணை கொடுக்கப்பட்ட 40,000 பட்டம் பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு உறுதியாக வேலைவாய்ப்பு கொடுக்கவும் உறுதி கொடுத்துள்ளது.
வர்த்தகம்
டிசிஎஸ் நிறுவனம் மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் நல்ல லாபத்தை அடைந்திருந்தாலும், அடுத்து வரும் இரண்டு காலாண்டில் கொரோனா பாதிப்பின் கடுமையான வர்த்தகம் மற்றும் வருவாய் சரிவுகளைச் சந்திக்க உள்ளதாகத் தனது காலாண்டு முடிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முக்கியத் தலைவர்கள்
டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாத், "நிறுவனத்தில் இருந்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய எவ்விதமான திட்டமும் இல்லை" என்று தெரிவித்தார்.
இதேபோல் இந்நிறுவனத்தின் தலைமை HR Milind Lakkad பேசுகையில், டிசிஎஸ் தற்போது 40,000 கல்லூரி மாணவர்களுக்குப் பணிநியமன ஆணை கொடுத்துள்ளது. அவர்களை அனைவரையும் பணியில் சேர்க்க உள்ளோம். பொதுவாகக் கல்லூரிகள் ஜூன் மாதம் வரையில் இருக்கும். இதன் பின்பு படிப்படியாக மாணவர்கள் பணியில் வந்து சேர்வார்கள் எனத் தெரிவித்தார்.
ஊழியர்கள் வெளியேற்பு விகிதம்
தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்பு விகிதம் (attrition rate) 12.1 சதவீதமாக உள்ளது. இது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் மத்தியில் மிகவும் சிறப்பான அளவீடாக உள்ளது.
இதேபோல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் டிசிஎஸ் ஊழியர்கள் கடுமையாகப் பணியாற்றி வருவதாகவும் தலைமை மனிதவள பிரிவு அதிகாரி தெரிவித்தார்.
இந்திய ஊழியர்கள்
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்தியக் கிளைகளில் மட்டும் சுமார் 3.55 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 90 சதவீத ஊழியர்கள் முழு வேலை நேரத்திலும் பணியாற்றி வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர் எனத் தலைமை செயல் அதிகாரி கணபதி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.