இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஜனவரி 9 மாலை அன்று டிசம்பர் 31, 2022 உடன் முடிந்த நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
2023 ஆம் ஆண்டு துவங்கிய நாள் முதல் ஐடி சேவைத் துறை சார்ந்து பல கணிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தி வரும் நிலையில், ஐடி நிறுவன முதலீட்டாளர்கள் டிசிஎஸ் காலாண்டு முடிவுகளையும், வருவாய் வளர்ச்சி அளவீடு குறித்துக் கணிப்புகளை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்தப் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இன்று மாலை தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
ராஜேஷ் கோபிநாதன்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்திற்குப் பொதுவாக டிசம்பர் காலாண்டு முடிவுகள் மந்தமாகவே இருக்கும் ஆனால் இந்த முறை கிளவுட் சேவைகள், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சந்தை வளர்ச்சி, வென்டார்கள் உடனான இணைப்பு மூலம் சந்தை பங்கீடு அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் டிசிஎஸ் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது என டிசிஎஸ் சிஇஓ மற்றும் நிர்வாக இயங்குனர் ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்தார்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு முடிவுகளில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாப அளவு 10.98 சதவீதம் அதிகரித்து 10,883 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் டிசிஎஸ் நிறுவனம் 9,806 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருவாய்
இதேபோல் டிசம்பர் காலாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் வருவாய் முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 48,885 கோடி ரூபாயில் இருந்து 19.11 சதவீதம் அதிகரித்து 58,229 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நிலையான நாணய மதிப்பு
மேலும் நிலையான நாணய மதிப்பில் அதாவது constant currency terms, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் 13.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தச் சிறப்பான வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக வட அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சந்தையில் பதிவான 15.4 சதவீதம் வளர்ச்சி முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆப்ரேட்டிங் மார்ஜின்
இதேபோல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 24.5 சதவீதமாக உள்ளது, இது - ஆண்டு அளவீட்டைக் காட்டிலும் 0.5 சதவீதம் குறைவாகும். ஊழியர்களின் அதிகப்படியான சம்பளம், புதிய ஊழியர்கள் நியமனம் ஆகியவை கூடுதல் செலவுகளை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம்.
ஈவுத்தொகை
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள டிசம்பர் காலாண்டு முடிவுகளில் சிறப்பு ஈவுத்தொகையாக 67 ரூபாய் சேர்த்து ஒரு பங்கிற்குச் சுமார் 75 ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள மொத்த ஈவுத்தொகையான 75 ரூபாய்க்குப் பதிவு நாள் ஆக ஜனவரி 17 தேதியும், பணம் செலுத்தும் தேதி பிப்ரவரி 3, 2022 ஆகவும் டிசிஎஸ் அறிவித்துள்ளது.
அட்ரிஷன் விகிதம்
டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 2,197 பேர் குறைந்துள்ளது. இதோடு டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 21.3 சதவீதமாக உள்ளது.