இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் திங்கட்கிழமை மாலை காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைப் பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஒரு நாள் வர்த்தகத்தில் டிசிஎஸ் பங்கு விலை 50 ரூபாய் வரையில் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
டிசிஎஸ் தனது டிசம்பர் காலாண்டு முடிவில் 11 சதவீதத்திற்கும் அதிகமாக லாப வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று குறைவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
இதே காலக்கட்டத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை 30 மாதங்களுக்குப் பின்பு குறைந்துள்ளது. அதாவது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டுக்கும், முந்தைய காலாண்டை ஒப்பிடுகையில் 2,197 பேர் குறைவாக உள்ளது.
டிமாண்ட் சரிவு
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள டிமாண்ட் சரிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என அச்சம் நிலவும் காரணமாக முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் காரணத்தால் சரிவு ஏற்பட்டு உள்ளது.
மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வெளியிட்ட டிசம்பர் காலாண்டு முடிவுகள் படி இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை டிசம்பர் 31 ஆம் தேதி முடிவில் 6,16,171ல் இருந்து 6,13,974 ஆகக் குறைந்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள்
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனப் பங்குகள் 3319.70 ரூபாய்க்கு முடிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் போதே 3290.00 ரூபாய் அளவீட்டில் தான் துவங்கி 3,231 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
பெரும் சரிவு
தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனப் பங்குகள் 1.35 சதவீதம் சரிந்து 3,275 ரூபாய் அளவீட்டைத் தொட்டு, 11.95 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டைக் கொண்டு உள்ளது. இன்று அதிகப்படியாக 3,231 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
டிசிஎஸ் லாபம், வருவாய்
டிசிஎஸ் நிறுவனம் டிசம்பர் காலாண்டு முடிவுகளில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாப அளவு 10.98 சதவீதம் அதிகரித்து 10,883 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் டிசிஎஸ் நிறுவனம் 9,806 கோடி ரூபாயாக இருந்தது.
வருவாய் அளவு
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 48,885 கோடி ரூபாயில் வருவாய் அளவு நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் 19.11 சதவீதம் அதிகரித்து 58,229 கோடி ரூபாயாக உள்ளது.
ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு
டிசம்பர் மாதத்தில் டிசிஎஸ் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 24.5 சதவீதமாக உள்ளது, இது - ஆண்டு அளவீட்டைக் காட்டிலும் 0.5 சதவீதம் குறைவாகும். இந்தக் காலகட்டத்தில் புதிய ஊழியர்களுக்கான பட்ஜெட் அளவீட்டை குறைத்த காரணத்தால் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவீட்டில் பெரும் சரிவை தடுத்துள்ளது டிசிஎஸ் நிர்வாகம்.
டிசிஎஸ் ஈவுத்தொகை
டிசிஎஸ் டிசம்பர் காலாண்டு முடிவுகளில் சிறப்பு ஈவுத்தொகையாக 67 ரூபாய் சேர்த்து ஒரு பங்கிற்குச் சுமார் 75 ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. இதோடு டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 21.3 சதவீதமாக உள்ளது.