கொரோனா வைரஸால் உலகில் பல கம்பெனிகள் தங்கள் வியாபாரத்தை இழந்து இருக்கிறார்கள்.
ஆனால் டெலிகாம் கம்பெனிகள் இப்போது தான் சூடு பிடித்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மேற்படி வியாபாரம் செய்ய போதுமான பணம் இல்லாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்திய டெலிகாம் கம்பெனிகள்.
இதற்கு தீர்வு காணும் விதத்தில் டெலிகாம் கம்பெனிகள் அரசிடம் சில கோரிக்கைகளை முன் வைத்து இருக்கிறார்கள்.
ஜிஎஸ்டி வரி ரீஃபண்ட்
இந்தியாவின் 3 பெரிய டெலிகாம் கம்பெனிகளுக்கு மொத்தம் ரூ.35,000 கோடி ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகை பாக்கி இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு மட்டும், அரசு தரப்பில் இருந்து 18,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி ரீஃபண்ட் கொடுக்க வேண்டி இருக்கிறதாம்.
அதே போல ஏர்டெல்லுக்கு 10,000 கோடி ரூபாயும், வொடாபோன் ஐடியாவுக்கு 7,000 கோடி ரூபாயும் ஜிஎஸ்டி ரீஃபண்ட் பாக்கி இருக்கிறதாம்.
ப்ளீஸ் பணம் கொடுங்கள்
இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்களுக்கு, கடந்த முழு நிதி ஆண்டுக்கு, அரசு, ஜிஎஸ்டி ரீஃபண்ட் கொடுக்கவில்லை. எனவே தங்களின் ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகைகளைக் கொடுக்கச் சொல்லி கடிதம் எழுதி இருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 2019 காலத்திலேயே, இந்திய டெலிகாம் கம்பெனிகள், தங்களின் ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகையைக் கேட்டு கோரிக்கை வைத்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது. ஆனால் பதிலோ பணமோ எதுவும் கிடைக்கவில்லை.
கடன் ப்ளீஸ்
அப்படி ஜிஎஸ்டி ரீஃபண்ட் கொடுக்கவில்லை என்றால், ரீஃபண்ட் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி வரிகளை எல்லாம் சொத்தாகக் கருதி, எம் சி எல் ஆர் ரேட்டுக்கு கடனாவது வாங்க் கொள்ள அனுமதிக்குமாறு கெஞ்சிக் கேட்டு இருக்கிறார்கள் இந்திய டெலிகாம் கம்பெனிகள். பின்ன, கொரோனா காலத்தில், கையில் பணம் இல்லாமல் சேவைகளை கூடுதலாகவும், தரமாகவும் எப்படி வழங்க முடியும்..? அதற்காகத் தான் இவ்வளவு கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள் டெலிகாம் கம்பெனிகள்.
சந்திப்பு
இது தொடர்பாக பல முறை டெலிகாம் கம்பெனிகள், டெலிகாம் துறையையும், மத்திய நிதி அமைச்சகத்தையும் சந்தித்துப் பேசி இருக்கிறார்களாம். ஆனால் 35,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொடர்பாக எந்த ஒரு பாசிட்டிவ் பதிலும் கிடைக்கவில்லை என்கிறார்கள் டெலிகாம் கம்பெனிகள்.
20,000 கோடி
இது போக, அரசின் BSNL மற்றும் MTNL கம்பெனிகள், பல நிறுவனங்களிடம் இருந்து, டெலிகாம் சேவைக்குத் தேவையான கருவிகளை சுமார் 20,000 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்களாம். அந்த பில் தொகைகளையும், இன்னும் அரசு செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கிறார்களாம்.
பேமெண்ட் முடியாது
அரசிடம் போதுமான பணம் இல்லை. எனவே டெலிகாம் கம்பெனிகள் மற்றும் டெலிகாம் சாதனங்களை வழங்கிய கம்பெனிகளுக்கு, இப்போதைக்கு பணத்தைக் கொடுக்க முடியாது என, நிதி அமைச்சக தரப்பில் சொல்லி இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
வியாபார சுழற்சி
புதிதாக 20 லட்சம் கோடிக்கு திட்டம் போடுவதை நிச்சயம் வரவேற்கிறோம். ஆனால், அரசு கொடுக்க வேண்டிய வரி பாக்கித் தொகைகளை, ஒழுங்காகக் கொடுக்காமல், வியாபாரம் எப்படி நடக்கும்? வாங்கிய பொருட்களுக்கு, அரசே பணத்தை கொடுக்கவில்லை என்றால் எப்படி கம்பெனிகள், தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் போன்ற அத்தியாவசியச் செலவுகளைச் செய்வார்கள்..? இதை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.