உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா சில நாட்களுக்கு முன்பும் டாடா மோட்டார்ஸ் உடன் கூட்டணி சேர்ந்து இந்தியாவில் கார் தாயரிப்பு மற்றும் விற்பனையை மேற்கொள்ள உள்ளது எனச் செய்திகள் வெளியான நிலையில், இதை டாடா குழுமம் மறுத்தது.
இந்நிலையில் தற்போது டாடா - டெஸ்லா கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய திட்டம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் எலக்டிரிக் கார்கள்
இந்தியாவில் எலக்டிரிக் கார்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும், விற்பனை அளவு என்னவோ குறைவாகத் தான் உள்ளது. இதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளது, ஒன்று எலக்ட்ரிக் கார்களின் அதீத விலை மற்றும் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களைக் கொண்டு நீண்ட தூரம் பயணங்களை மேற்கொள்ள ஏதுவான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லாதது தான்.
டெஸ்லா அறிமுகம்
இந்நிலையில் இந்தியாவில் டெஸ்லா தனது கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் எனத் திட்டத்துடன் டெஸ்லா, டாடா குழுமத்தின் மின்சார உற்பத்தி நிறுவனமான டாடா பவர் உடன் கூட்டணி சேர்ந்து இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் இன்பராஸ்டக்சர் அமைக்கும் திட்டமிட்டு உள்ளது.
டாடா பவர் அதிரடி வளர்ச்சி
இதன் எதிரொலியாக டாடா பவர் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சுமார் 5 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனால் இந்நிறுவன முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். ஜூன் 9, 2014க்கு பின்பு சிறப்பான வர்த்தக முடிவு எதிர்கொண்டு உள்ளது டாடா பவர் நிறுவனம்.
மாடல் 3 கார் அறிமுகம்
டெஸ்லா நீண்ட ஆலோசனைக்குப் பின்பு இந்தியாவில் தனது அலுவலகத்தைத் துவங்கியது மட்டுமல்லாமல் தனது மாடல் 3 காரை விரைவில் விற்பனைக்காக அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தொழிற்சாலை
இதேவேளையில் கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் டெஸ்லா இம்மாநிலத்தில் கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய தொழிற்சாலைகள்
இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைக்கும் திட்டம் குறித்து உறுதி செய்யப்படாத நிலையில், இந்நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு தான் சீனாவில் மிகப்பெரிய தொழிற்சாலையை அமைத்து விற்பனையிலும், ஏற்றுமதியிலும் சிறந்து விளங்குகிறது. இதேவேளையில், ஜெர்மனியிலும் புதிய பிரம்மாண்ட தொழிற்சாலையை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்
எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் திட்டம் குறித்து டாடா பவர் மற்றும் டெஸ்லா ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் மட்டுமே இருக்கும் நிலையில், இரு நிறுவனங்களும் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.