சென்னை நகரம் தொழில்நுட்பம், உற்பத்தி,மருத்துவம் மற்றும் பிற துறைகளில் சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும் அதிகளவில் அன்னிய முதலீடுகளையும் சென்னை ஈர்த்து வருகிறது. மேலும் நாளுக்கு நாள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்த வளர்ச்சிக்கு ஏற்ப சென்னைக்கு ஒரு பெரிய விமானம் தேவை என்பதை காட்டிலும் அத்தியாவசியம் என்றாகி விட்டது. தற்போதுள்ள சென்னை விமான நிலையம், பெரிய விமானங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாளும் திறன் கொண்ட நவீன விமான நிலையமாக இல்லாததால் பல சர்வதேச விமான சேவைகள் சென்னையை தவிர்த்து பெங்களூரு மற்றும ஹைதராபாத் போன்ற நகரங்களை தேர்வு செய்கின்றன.

சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதில் பல பிரச்சினைகள் இருப்பதால், வெளிநாடுகளிலும், பெரிய நகரங்களில் இருப்பது போன்ற சகல வசதிகள் கொண்ட விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்துடன், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் முன் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2022 ஆகஸ்டில் மத்திய அரசு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தது. ரூ.29,144 கோடி மதிப்பிலான இந்த மிகப்பெரிய பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் 2,172.73 ஏக்கரில் இரண்டு இணையான ஓடுபாதைகளுடன் அமைக்கப்பட உள்ளது.
அதேசமயம், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீண்ட நாட்களாக தொடர் போராட்டத்தில் கிராம மக்ககள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரியில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரமும், நலன்களும் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.
2024 ஜூலையில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான முதல் கட்ட ஒப்புதல்-தள அனுமதி-சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட ஒப்புதலை பெறுவதற்காக சில வாரங்களுக்கு முன்பு டிட்கோ சிவில் விமான போக்குவரத்து அமைச்சக்கத்திற்கு விண்ணப்பதை அனுப்பி, கொள்கை ரீதியான ஒப்புதலை கோரியது.
அடுத்த மாதம் ஒப்புதல் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒப்புதல் பெற்ற உடனே, டிட்கோ ஏற்கனவே தயாரித்து ரெடியாக வைத்துள்ள டெண்டர் ஆவணங்களை வெளியிடும் என்று கூறப்படுகிறது. மாநில அரசு அடுத்த ஆண்டு கட்டுமான பணிகளை தொடங்கினால், ஐந்து ஆண்டுகளில் திட்டத்தின் முதல் கட்டம் விமான பயணிகளுக்காக முழுமையாக செயல்படுத்தப்படும். நான்கு கட்ட பணிகளும் முடிந்ததும் கிட்டத்தட்ட 100 கோடி பயணிகளை கையாள முடியும்.


Click it and Unblock the Notifications