நகை கடைக்காரர்கள் நாம் நகை வாங்கும் போது அதை ஒரு பிங்க் நிற பேப்பரில் வைத்து மடித்து தருவார். இது ஏன் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? காலம் காலமாக இதே வழக்கம் தான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. இங்குள்ள பெரும்பாலான நகைக்கடைக்காரர்கள் சிறிய தோடு, மூக்குத்தி, மாட்டல், செயின் இப்படி என்ன வாங்கினாலும் அதை பேப்பரில் மடித்து பின்னர் வைத்த பர்சுக்குள் வைத்து கொடுப்பார். இதற்குப் பின்னால் சில சுவாரஸ்ய தகவல்கள் ஒளிந்திருக்கிறது.
ஏன் பிங்க் நிற பேப்பரில் தங்கம் வழங்கப்படுகிறது என்ற கேள்விக்கு ஜெய்ப்பூரில் உள்ள நகை வடிவமைப்புத் துறைத் தலைவராக இருக்கும் கிரிஷன் குமார் பதில் அளித்துள்ளார். தங்கம் பளபளப்பாக இருக்கும் ஒரு உலோகம். இதில் காப்பரும் கலந்து தான் நகைகளாக செய்யப்படும்.
ஏனெனில் தங்கம் மிகவும் மென்மையாக இருப்பதால், தூய தங்கத்தை ஒன்றுமே செய்ய முடியாது, அப்படி செய்தாலும் அது ஒடிந்து விடும். எனவே இந்த ரோஸ் கலர் பேப்பரில் தங்க ஆபரணங்களை மடிப்பதன் மூலம் தங்கம் தன் பொலிவை இழக்காமல் இருக்குமாம். ஏனெனில் இந்த பேப்பரில் ஆன்ட்டி டார்னிஷ் கோட்டிங் பூசப்பட்டிருக்கும். இது நகையில் காற்று மற்றும் ஈரப்பதம் புகாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் இரண்டு, மூன்று நகைகளை ஒன்றாக வைக்கும் போது ஸ்க்ராட்ச் விழாமல் இருப்பதற்கும் இந்த சிறிய பேப்பர் உதவியாக இருக்கும்.

அதேபோல நம் ஊரில் சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் ஒரு சில நிறங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். கலாச்சார அடிப்படையில் பார்க்கும்போது மஞ்சள், சிவப்பு பச்சை, ரோஸ் போன்ற நிறங்கள் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதனாலேயே இன்றளவும் மாடர்ன் பாக்ஸ்கள் இருந்தாலும் பிங்க் நிற பேப்பரையே நகை கடைக்காரர்கள் பயன்படுத்தி வருவதாக கிரிஷன் குமார் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல அங்காரா என்ற நகைக்கடையின் இணை நிறுவனரான அதிதி ஏன் பிங்கு நிற பேப்பர் பயன்படுத்தப்படுகிறது? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். தங்கம் மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதை பிங்க் நிற பேப்பரில் பார்த்த உடனேயே பிரகாசமாக தெரியும், எனவே நகை கடைக்காரர் பேப்பரில் மடித்து வாடிக்கையாளர்களிடம் கொடுக்கும்போது நகை எவ்வளவு பளபளப்பாக இருக்கிறது என்கிற பாசிட்டிவ் எண்ணம் வாடிக்கையாளர்களுக்கு வரும். இது வாடிக்கையாளர்களை கவரும் ஒரு யுக்தியாகவும் உள்ளதாகக் கூறியுள்ளார். இந்த பிங்க் நிற பேப்பருக்கு பின்னால் இப்படி ஒரு அறிவியல் மற்றும் உளவியல் காரணங்கள் இருக்கிறது என்பது இவர்களின் பதில்களின் மூலம் தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications