இந்தியாவின் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யங்களில் ஒன்று டாடா குழுமம். அப்படிப்பட்ட டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின், துணை நிறுவனம் தான் ராலீஸ் இந்தியா (Rallis India). இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது எட்டு மாதங்களில் இருமடங்கு லாபத்தினை கொடுத்துள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், இந்தியா முதலீட்டு குருவான ராகேஷ் ஜூன்ஜூவாலாவின் முதலீட்டு போர்ட்போலியோவிலும் இந்த பங்கு உள்ளது தான்.
சரி வாருங்கள் அப்படி எவ்வளவு தான் இந்த பங்கின் விலை ஏற்றம் கண்டுள்ளது என பார்ப்போம்.
ஏற்றம்
ராலீஸ் இந்தியாவின் பங்கின் விலையானது, கடந்த மார்ச் மாத குறைந்த விலையில் இருந்து சுமார் 132 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. அதாவது 127.10 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, தற்போது 295.90 ரூபாயாக உள்ளது. எனினும் இந்த பங்கின் விலையானது ஆகஸ்ட் 26, 2020 அன்று 52 வார உச்சத்தினை தொட்டது. இதே 52 வார குறைந்தபட்ச விலையானது மார்ச் 24 அன்று தொட்டது.
ராகேஷ் ஜூன்ஜூவாலா முதலீடு
செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி, ராகேஷ் ஜூன்ஜூவாலவின் வசம் ராலீஸ் இந்தியா (Rallis India) நிறுவனத்தில் 2 கோடி பங்குகளை அல்லது 10.31% பங்குகள் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
மிட் கேப் நிறுவனமான இது அக்ரோ கெமிக்கல்ஸ் செக்டாரில் வர்த்தகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் டிசம்பர் 8, 2020 நிலவரப்படி, 5,663.90 கோடி ரூபாயாகும்.
ராலீஸ் இந்தியாவின் பங்கு விலை
செவ்வாய்கிழமை நிலவரப்படி, ராலீஸ் இந்தியாவின் பங்கு விலையானது தொடக்கத்திலேயே 295.90 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதற்கு முந்தைய நாள் முடிவு விலை 293.60 ரூபாயாகும். கடந்த வாரத்தில் டாடா குழுமத்தின் பங்கு விலையானது 4 சதவீதம் வீழ்ச்சி கண்டது. எனினும் கடந்த மாதத்தில் 19 சதவீதம் ஏற்றத்தினை கண்டது.
ராலீஸ் இந்தியா லாபம்
ராலீஸ் இந்தியா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் (வரிக்குப் பிறகான லாபம்), கடந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 2 சதவீதம் குறைந்து 83 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே செப்டம்பர் 2019 காலாண்டில், வரிக்குப் பிறகான லாபம் 85 கோடி ரூபாயாக இருந்தது. இதே போல் இந்த நிறுவனத்தின் வருவாயும் 3 சதவீதம் குறைந்து, 725 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.