அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக முதலீட்டுச் சந்தை கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களது முதலீட்டைக் காப்பாற்றிக்கொள்ளக் கச்சா எண்ணெய் சந்தையில் முதலீடு செய்து வந்தனர்.
ஆனால் புதன்கிழமை இறுதியில் அமெரிக்கத் தேர்தலில் ஜோ பிடன் முன்னிலையில் இருப்பது தெளிவான நிலையில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் பங்குச்சந்தையில் அதிகளவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
இந்தியச் சந்தையில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை சரிந்து வந்த நிலையில் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக இன்று இந்தியச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
தங்கம் விலை
வியாழக்கிழமை MCX வர்த்தகச் சந்தையில் டிசம்பர் மாதத்திற்கான ஆர்டர்கள் விலை தொடர் வளர்ச்சிப் பாதையில் உள்ளது. இன்று காலை வர்த்தகத் துவக்கத்தில் தங்கம் விலை 0.8 சதவீதம் அதிகரித்து 10 கிராம் தங்கத்தின் விலை 51,226 ரூபாயாக உள்ளது.
புதன் கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 800 ரூபாய் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று காலை வர்த்தகத்தில் 1.2 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளியின் விலை 62,086 ரூபாயாக உயர்ந்துள்ளது. புதன் கிழமை வர்த்தகத்தில் வெள்ளி விலை சுமார் 1,400 ரூபாய் வரையில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்பாட் சந்தை விலை
இந்தியச் சந்தையைப் போலவே சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை கணிசமாக அளவில் உயர்ந்து ஸ்பாட் கோல்டு சந்தையில் ஒரு அவுன்ஸ் 1,904.66 டாலராக இருந்தது.
இதேபோல் வெள்ளி 0.3 சதவீத உயர்வுடன் 23.98 டாலராகவும், பிளாட்டினம் 869.04 டாலராகவும், பல்லாடியம் 0.5 சதவீதம் சரிந்து 2,276.97 டாலராகக் குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் கிட்டதட்ட உறுதியாகியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யத் துவங்கியுள்ள நிலையில் இன்றைய வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் 1.71 சதவீதம் சரிந்து ஒரு பேரல் 38.48 டாலராக வர்த்தகமாகிறது.
இதேபோல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.70 சதவீதம் சரிந்து ஒரு பேரல் 40.53 டாலருக்கு வர்த்தகமாகிறது.
கச்சா எண்ணெய் தேவை
கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது, அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது, இந்தியாவில் இன்னும் பெட்ரோல் டீசல் பயன்பாடு இயல்பு நிலைக்கு அடையவில்லை..
இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தேவையும், பயன்பாடும் அதிகளவில் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கத் தேர்தலின் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்து இதன் விலை அதிகரிக்கத் துவங்கியது.
அமெரிக்கத் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் ஜோ பிடன் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையில் கடுமையான போட்டி நிலவினாலும் இறுதியில் ஜோ பிடன் 270க்கு 264 இடத்தில் முன்னிலையில் இருக்கிறார். மேலும் டிரம்ப் 68,590,057 வாக்குகளைப் பெற்ற நிலையில் பிடன் 72,054,458 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது இந்திய நேரப்படி வியாழக்கிழமை 10.12 நிலவரம்.
டிரம்ப்
அதிபர் தேர்தலில் பிடன் வெற்றி உறுதியான நிலையில் டிரம்ப் வாக்குகளை மறுபடியும் கணக்கிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கத் தேர்தல் களத்தில் முடிவுகள் உறுதியான நிலையிலும் பரபரப்புக் குறையாமல் உள்ளது.
முதலீட்டாளர்கள்
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அடுத்தக் கிட்டதட்ட உறுதியான நிலையில், முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குச்சந்தை மற்றும் தங்க சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.