சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா இந்தியாவிலும் ஆரம்பம் முதலே அதிகளவிலான பாதிப்புகளைக் காட்ட துவங்கியது. இதன் எதிரொலியாக மத்திய அரசு கொரோனா தொற்று மக்கள் மத்தியில் குறைக்க வேண்டும் என்பதற்காகப் பிற நாடுகளில் செய்தது போலவே 21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது.
இதன் எதிரொலியாக உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சேர்ந்து இந்திய பங்குச்சந்தையில் தங்கள் முதலீட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இந்திய நிறுவனப் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர். இதனால் என்ன ஆனது தெரியுமா..?
22 லட்சம் கோடி ரூபாய்
முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் இந்திய குடும்ப நிறுவனங்கள் மட்டும் 2019-20ஆம் நிதியாண்டில் சுமார் 22 லட்சம் கோடி ரூபாய் அளவிலான மதிப்பை இழந்துள்ளது.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 2021ஆம் ஆண்டு நிறுவனங்களின் வர்த்தகம், வருவாய், லாபம் அனைத்தும் அதிகளவிலான பாதிப்பை சந்திக்கும் என முன்கூட்டியே உணர்ந்த முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர். இது தான் 22 லட்சம் கோடி ரூபாய் இழப்புக்கு முக்கியமான காரணம்.
873 குடும்ப நிறுவனங்கள்
முதலில் குடும்ப நிறுவனங்கள் என்றால், ஒரு நிறுவனத்தை உருவாக்கியவரின் குடும்பத்தில் இருந்து ஒருவரோ அல்லது பலர் இந்நிறுவனத்தின் நேரடி நிர்வாகத்திலோ அல்லது வர்த்தகத்தைச் சீர்படுத்தும் பொறுப்பில் இருந்தால் இது குடும்ப நிறுவனம்
இப்படி இந்தியாவில் மட்டும் சுமார் 873 பெரும் குடும்ப நிறுவனங்கள் உள்ளது.
மோசமான வீழ்ச்சி
இந்நிலையில் இந்த 873 குடும்ப நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பீடு மார்ச்31 வரையில் முடிந்த 2019-20ஆம் நிதியாண்டில் சுமார் 26.3 சதவீதம் சரிந்து, அதாவது 22 லட்சம் கோடி ரூபாய் சரிந்து 61.8 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதுவே 2019ஆம் நிதியாண்டில் 6 சதவீத வளர்ச்சியும், 2018ஆம் நிதியாண்டில் 20 சதவீத வளர்ச்சியும் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தப்பித்த நிறுவனங்கள்
இந்த மாபெரும் வீழ்ச்சியில் சில முக்கியமான நிறுவனங்கள் மட்டும் வீழ்ச்சி அடையாமல் தப்பித்து, சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன் படி பார்தி ஏர்டெல் 42.5 சதவீதம் வரையில் உயர்ந்து சந்தை மதிப்பீடு 2.7 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல் டிமார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்க்கெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு 55.7 சதவீதம் வரையில் உயர்ந்து 1.42 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு 11.3 சதவீதம் உயர்ந்து 1.59 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சரிந்த முக்கிய நிறுவனங்கள்
- ஹிந்துஜா குரூப் 72 சதவீதம் சரிவு
- இன்டஸ்இந்த் வங்கி 78 சதவீதம் சரிவு
- வேதாந்தா குரூப் 52.4 சதவீத சரிவு
- மஹிந்திரா 48 சதவீத சரிவு
- பிர்லா குரூப் 41.4 சதவீத சரிவு
- பஜாஜ் குரூப் 31 சதவீத சரிவு(2008 நிதி நெருக்கடிக்குப் பின் முதல் முறையாகச் சரிந்துள்ளது)
- டாடா குழுமம் 16 சதவீத சரிவு
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 19 சதவீத சரிவு