இந்தியா, வெளிநாட்டு கம்பெனிகளிடம் இருந்து முதலீடுகளை ஈர்க்க பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் கூட ஜப்பானிய கம்பெனிகளை ஈர்க்க வேலை முழு வேகத்தில் நடப்பதாகச் செய்திகள் வெளியாயின. "சீனாவில் இருந்து இந்தியா வந்தா Incentive நினைவிருக்கா? ஜப்பான் கம்பெனிகளை ஈர்க்கும் வேலையில் இந்தியா" என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை கூட எழுதி இருக்கிறோம்.
ஆனால் ஜப்பானிய ஆட்டோமொபைல் கம்பெனியான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸின் துணைத் தலைவர் (Vice President) இந்தியாவுக்கு நோ சொல்லி இருக்கிறார்.
டொயோட்டாவின் காட்டமான கருத்து
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் கம்பெனியின் துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன், மத்திய அரசு ஆட்டோமொபைல்கள் (கார், பைக்) மீது கூடுதலாக விதிக்கும் வரிகளை பற்றிய தன் கருத்தை காரசாரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த கூடுதல் வரிகளால் இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையில் வாகனங்களை விற்று, கம்பெனிகள் தங்களின் அளவை (Scale) பெருக்கிக் கொள்ள முடியவில்லை எனவும் சொல்லி இருக்கிறார்.
பொருளாதார சிக்கல்
இந்தியாவில் ஆட்டோமொபைல்கள் மீது கூடுதல் வரி விதிப்பதால், பல வாடிக்கையாளர்கள் கார் வாங்க முடியாத சூழல் உருவாகிறது. இதனால் உற்பத்தி ஆலைகள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. புதிய வேலை வாய்ப்புகள் உருவாவது இல்லை எனச் சொல்கிறார் சேகர் விஸ்வநாதன், துணைத் தலைவர், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்.
இந்தியாவுக்கு நோ
மேலும் பேசிய சேகர் விஸ்வநாதன் "நாங்கள் இந்தியாவுக்கு வந்து பணத்தை முதலீடு செய்த பின், எங்களுக்கு கிடைக்கும் செய்தி, எங்களுக்கு நீங்கள் வேண்டாம் என்பது தான்" என தன் வருத்தத்தையும் பதிவு செய்து இருக்கிறார். "இந்தியாவில் எந்த ஒரு சீர்திருத்தமும் இல்லாத சூழலில், டொயோட்டா இந்தியாவில் இருந்து வெளியேறாது. அதே நேரத்தில், டொயோட்டா இந்தியாவில் விரிவாக்கமும் செய்யாது" எனச் சொல்லி இருக்கிறார்.
டொயோட்டா வியாபாரம்
உலகின் முன்னணி கார் உற்பத்தியாளரான டொயோட்டா, கடந்த 1997-ம் ஆண்டு, இந்தியாவில் வலது கால் எடுத்து வைத்து உள்ளே வந்தது. இந்த கம்பெனி இந்தியாவில் கால் ஊன்றி கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆகின்றன. ஒட்டு மொத்த கார் சந்தையில், கடந்த ஆகஸ்ட் 2020-ல் டொயோட்டா மோட்டார் கம்பெனின் பங்கு வெறும் 2.59 சதவிகிதம் தானாம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2019-ல் இந்திய கார் சந்தையில் டொயொட்டாவின் பங்கு 4.95 சதவிகிதமாக இருந்தது என்கிறது ஆட்டோ கார் தரவுகள்.
கடுமையான வரி
இந்தியாவில் கார், இரு சக்கர வாகனம் என எல்லா ஆட்டோமொபைல்களுக்கும் 28 சதவிகிதம் வரி விதிக்கிறார்கள். இது போக கார்களின் ரகம், நீளம், இன்ஜின் சிசி போன்றவைகளைப் பொருத்து 1 - 22 சதவிகிதம் வரை கூடுதலாக வரி விதிக்கிறார்கள். 4 மீட்டர் நீளம் & 1,500 சிசி இன்ஜின் கொண்ட எஸ் யூ வி வாகனங்களுக்கு சுமாராக 50 % வரை வரி விதிக்கிறார்கள்.
எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதும் வரி அதிகரிக்கும்
இப்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது 5 % மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் வியாபாரம் அதிகரித்தால் தானாகவே, அதன் மீதான வரியையும் இந்திய அரசு அதிகரித்துவிடும் எனச் சொல்லி இருக்கிறார் சேகர் விஸ்வநாதன். இந்தியாவின் இறக்குமதி வரியால், டெஸ்லா எலெக்ட்ரானிக் கார்கள், இந்தியர்களால் வாங்க முடியாத அளவுக்கு விலை அதிகரிக்கிறது என எலான் மஸ்கே சொல்லி இருந்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது.
கடையை சாத்திய ஜெனரல் மோட்டார் & ஃபோர்ட்
ஜெனரல் மோட்டார் என்கிற கம்பெனி, கட்ந்த 2017-ம் ஆண்டு, தங்களால் இந்தியாவில் சிறப்பாக வியாபாரம் செய்து சந்தையை பிடிக்க முடியவில்லை என, இந்தியாவில் இருந்து வெளியேறினார்கள் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. இந்தியாவில் வியாபாரம் செய்ய முடியாமல், கமபெனிகள் தெறித்து ஓடுவதற்கு இது ஒரு பெரிய சாட்சி.
Ford ஜாயிண்ட் வெஞ்சர்
அதே போல உலகின் முன்னணி ஆட்டோமொபைல் கம்பெனியான Ford, இந்தியாவில் இருக்கும் தன் பெரும்பாலான சொத்துக்களை, மஹிந்திரா & மஹிந்திரா ஜாயிண்ட் வெஞ்சர் கம்பெனிக்கு மாற்ற சம்மதித்து இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஃபோர்ட் கம்பெனியும், தனக்கென இந்தியாவில் ஒரு சந்தையை உருவாக்கப் போராடி, தற்போது பின் வாங்கி இருப்பது குறிப்பிடத்தகக்து.
அரசுக்கு நெருக்கடி
ஒரு பக்கம் மத்திய அரசு, முதலீடுகளை ஈர்க்க பல திட்டங்களை அறிவித்து போராடிக் கொண்டு இருக்கிறது. ஆனால் இன்னொரு பக்கம், இந்தியாவில் இருந்து ஜெனரல் மோட்டார், ஃபோர்ட் போன்ற உலகின் முன்னணி கம்பெனிகள் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். பொருளாதாரம் 23.9 % வீழ்ச்சி கண்டு இருக்கும் இந்த நேரத்தில், டொயோட்டா போன்ற கம்பெனிகள் விரிவாக்கம் செய்யாமல் இருப்பது அரசுக்கு அத்தனை நல்ல செய்தி அல்ல. இதை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது? வரி குறைக்குமா? ஆட்டோமொபைல் கம்பெனிகளுக்கு வேறு ஏதாவது சலுகைகளைக் கொடுக்குமா? பொருத்திருந்து பார்ப்போம்.