உலகில் இந்தியா தொடங்கி, எல்லா நாடுகளும், தங்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகள், எவ்வளவு நெருக்கடியான சூழலிலும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
அப்போது தானே அவரவர் நாட்டின் பொருளாதாரம் சீராக இயங்கும். இப்போதைக்கு, பல முன்னணி நாடுகள் மற்றும் கம்பெனிகளின் கணிசமான சப்ளை, சீனாவில் இருந்து தான் வந்து கொண்டு இருக்கிறது.
இதில் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக உழைக்கும் ஜப்பான் நாடும் ஒன்று. ஜப்பான் உலகின் டாப் 10 பொருளாதாரங்களில் ஒன்று என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சீனா சார்பு
சீனாவைச் சார்ந்து இருப்பதால் ஜப்பானுக்கு என்ன பிரச்சனை? சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது, பல நாடுகள் முதல் உலகின் பல கம்பெனிகளுக்குத் தேவையான சப்ளைகள் சரியாகக் கிடைக்கவில்லை. எனவே, பலரும் இனி சீனாவை மட்டும் அதிகம் சார்ந்து இருக்கக் கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
மற்ற நாடுகளுக்கு பரவலாக்கல்
எனவே, சீனாவில் மட்டும் தங்கள் நாட்டின் சப்ளைகளை குவிக்காமல், மற்ற பல நாடுகளிலும் தங்கள் சப்ளைகளை பரவலாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஜப்பான் இந்த சப்ளை செயின் மாற்றத்துக்கு என்று, தனியாக ஊக்கத் தொகை (Incentive) எல்லாம் தருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஜப்பான் ஊக்கத் தொகை
சீனாவில் இருந்து வெளியேறும் ஜப்பானிய கம்பெனிகள், இந்தியா போன்ற சில குறிப்பிட்ட நாடுகளுக்கு இடமாற்றம் செய்து கொண்டால், ஜப்பானிய அரசே, மானியம் வழங்கி வருகிறது. ஜப்பான் அரசு 2020-ம் ஆண்டுக்கான கூடுதல் பட்ஜெட்டில் 23.5 பில்லியன் யென்னை, இந்த இடமாற்ற ஊக்கத் தொகைக்கு ஒதுக்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியா தரப்பு
ஜப்பான் தரப்பில் இருந்து, இந்தியா வரும் கம்பெனிகளுக்கு ஊக்கத் தொகை கொடுக்கிறார்கள் என்றால், இந்திய தரப்பிலும், ஜப்பானிய கம்பெனிகளை இந்தியாவுக்கு அழைத்து வர பலமாக வேலை பார்த்து வருகிறார்களாம். அப்படி என்ன வேலை செய்கிறார்கள்? என்ன மாதிரியான கம்பெனிகளோடு எல்லாம் பேசி இருக்கிறார்கள்? வாங்க பார்ப்போம்.
உயர் மட்டக் குழு
சமீபத்தில் தான் கேபினெட் செயலர்களைக் கொண்ட ஒரு உயர் மட்டக் குழுவை அமைத்தது இந்திய அரசு. ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி, எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, மருத்துவ சாதனங்கள் உற்பத்தி, மருந்து உற்பத்தி போன்ற துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது தான் இந்த உயர் மட்டக் குழுவின் முக்கிய நோக்கம்.
நேரடி முதலீடு அல்லது ஜாயிண்ட் வெஞ்சர்
வெளிநாட்டுக் கம்பெனிகளை, இந்தியாவில் முதலீடு செய்ய வைக்க வேண்டும் அல்லது இந்திய கம்பெனிகளோடு ஜாயிண்ட் வெஞ்சராவது போட வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மத்தியா அரசு அதிகாரிகள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்களாம். குறிப்பாக கம்பெனிகளுக்குத் தேவையான நிலங்களுக்கு என்றே தனியாக ஒரு நில வங்கியை வேறு உருவாக்கி இருக்கிறார்களாம்.
பேச்சுவார்த்தை
இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யும் நாடுகள் பட்டியலில் ஜப்பானுக்கு 4-வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தரப்பில் இருந்து, தொடர்ந்து ஜப்பானிய கம்பெனிகளோடு பேசிக் கொண்டு இருக்கிறார்களாம். ஜப்பானிய கம்பெனிகளை கணக்கு எடுத்து எல்லா கம்பெனிகளுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
3 டைப் கம்பெனிகள்
வெறுமனே அழைப்பு விடுத்துக் கொண்டு இருந்தால் எப்படி? இந்தியாவுக்கு வேறு ஏதாவது திட்டம் இருக்கிறதா? என்றால் இருக்கிறது.
ஜப்பானிய கம்பெனிகளை 3 ரகமாகப் பிரித்து இருக்கிறார்கள்.
1. இதுவரை இந்தியாவில் முதலீடு செய்யாத கம்பெனிகள்.
2. இந்தியாவில் முதலீடு செய்து இருக்கிறார்கள் ஆனால் எல்லா வியாபாரத்திலும் முதலீடு செய்யவில்லை.
3. இந்தியாவில் கணிசமாக முதலீடு செய்து இருக்கிறார்கள், மேற்கொண்டு விரிவாக்கம் செய்யலாம்.
கம்பெனிகள்
மேலே சொன்ன கம்பெனிகள் வகைகளில், முதல் ரகத்தில் Mazda, Subaru, இ காமர்ஸ் கம்பெனியான Mizuno, டெக்ஸ்டைல் கம்பெனிகளான Descente, Unitika, ரயில் பெட்டி தயாரிக்கும் Japan Transport Engineering போன்ற கம்பெனிகளை அடையாளம் கண்டு இருக்கிறார்களாம்.
Nintendo, Hitachi Metals, Taisho Pharma, Ono Pharma, Mizuno போன்ற கம்பெனிகளிடம் பேசி இருக்கிறார்களாம்.
முதலீட்டுச் சக்கரம்
இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அப்படி பலன் கிடைத்து, இந்தியாவில் ஜப்பானிய கம்பெனிகள் முதலீடு செய்தால், வேலை வாய்ப்புகள் தொடங்கி இந்திய பொருளாதாரத்தின் நுகர்வு வரை எல்லாமே அதிகரிக்கும். கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பாதிப்புகள் மறையட்டும், பொருளாதாரம் வளரட்டும்.