முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இக்குழுமத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் பங்குகளை விற்பனை செய்து முதலீடுகளைத் திரட்டி வரும் நிலையில், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களான GIC மற்றும் TPG ஆகிய நிறுவனங்கள் இணைந்து சுமார் 7,350 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இந்த லாக்டவுன் காலத்தில் பல நிறுவனங்கள் வர்த்தகத்தையும், வருவாயும் இழந்து வரும் வேளையில், ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகப் பிரிவுகளின் பங்குகளை விற்பனை செய்து பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டுள்ளார்.
மேலும் இந்த லாக்டவுன் காலத்தில் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு மணிநேரத்திற்குச் சுமார் 90 கோடி ரூபாய் வளர்ச்சி அடைந்துள்ளது.
GIC மற்றும் TPG ஆகிய நிறுவனங்களின் இந்த 7,350 கோடி ரூபாய் முதலீடு மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் மதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. எத்தனை லட்சம் கோடி தெரியுமா..?
ரூ.5,512.5 கோடி முதலீடு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி சிங்கப்பூர் அரசு முதலீட்டு நிறுவனமான GIC, இந்திய ரீடைல் சந்தையில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் சுமார் 5,512.5 கோடி ரூபாய் முதலீடு செய்து சுமார் 1.22 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
TPG முதலீடு
இதேபோல் அமெரிக்காவின் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான TPG ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் 1,837.5 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்நிறுவனத்தின் 0.41 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் மதிப்பு
இவ்விரு நிறுவனங்களின் முதலீட்டின் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகப் பிரிவின் மொத்த மதிப்பு 4.285 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இன்னும் பல நிறுவனங்களுடன் பங்கு விற்பனைக்காக ரிலையன்ஸ் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேலையில், அடுத்த சில மாதங்களுக்குள் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகேஷ் அம்பானி
GIC முதலீடு குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் GIC நிறுவனத்தின் முதலீடும், கூட்டணியும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. முதலீட்டுச் சந்தையில் கடந்த 40 வருடத்தில் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து வருகிறது GIC. ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் GIC நிறுவனத்தின் முதலீடு நாட்டின் ரீடைல் வர்த்தகச் சந்தையைப் புரட்டிப்போடக் கூடிய ஒன்றாக இருக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
2வது முதலீடு
டிபிஜி நிறுவனம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் தற்போது வெறும் 1,837.5 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்திருந்தாலும், இந்நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் டெலிகாம் வர்த்தகமாக ஜியோ பங்குகள் விற்பனையின் போது சுமார் 4,546.8 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. இதனால் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் தற்போது செய்துள்ள முதலீடு 2வது முதலீடாகும்.
ரிலையன்ஸ் ரீடைல்
இந்திய ரீடைல் வர்த்தகப் பிரிவில் முதல் இடத்திற்கும் ரிலையன்ஸ் ரீடைல் பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றியதன் மூலம் தனது வர்த்தகம் மற்றும் விநியோகம் திறன் வலிமை அடைந்துள்ளது. ஈகாமர்ஸ் தளமான ஜியோமார்ட் அறிமுகம் செய்த நாளிலிருந்து தொடர்ந்து வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில் பகுதி பகுதியாக ரிலையன்ஸ் தனது ஈகாமர்ஸ் சேவையை நாட்டின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்து வருகிறது.
இதேபோல் பல்வேறு புதிய வர்த்தகப் பிரிவுகளையும் ரிலையன்ஸ் தனது ஜியோ மார்ட்-ல் சேர்ந்து வருகிறது, சமீபத்தில் நாட்டின் பெரு நகரங்களில் ஆடை விற்பனையை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.