2026ஆம் ஆண்டின் பாதி முடிந்துள்ளது. கிட்டதட்ட முதல் பாதியில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு, தேர்தல், வாக்கு எண்ணிக்கை, புதிய அரசு அமைப்பது என பல பரபரப்பான விஷயங்களாகவே சென்று விட்டது. இந்த பரபரப்புக்கு மத்தியிலும் திருச்சி ஒரு சாதனையை படைத்துள்ளது.
நடப்பாண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில், தமிழகத்திலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாவட்டமாக திருச்சி முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 1.65 கோடி சுற்றுலா பயணிகள் திருச்சிக்கு வருகை தந்துள்ளனர்.சுற்றுலா துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஜனவரி முதல் மே மாதம் வரை திருச்சிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை:
உள்நாட்டு சுற்றுலா பயணிகள்: 1.62 கோடி
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்: 2.2 லட்சம்

மற்ற மாவட்டங்களை விட சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் திருச்சி முன்னிலையில் உள்ளது. உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் கோவை 1.4 கோடி பயணிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ராமநாதபுரம் 1.1 கோடி பயணிகளுடன் மூன்றாம் இடத்திலும், தூத்துக்குடி 1 கோடி பயணிகளுடன் நான்காம் இடத்திலும், மதுரை 5ஆம் இடத்திலும் உள்ளன. வெளிநாட்டு பயணிகளின் வருகையிலும் திருச்சி முதலிடத்தில் உள்ளது.
ஆன்மீக சுற்றுலாதான் திருச்சியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகிய மூன்றும் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளன. இந்த மூன்று கோயில்களில் மட்டும் சுமார் 1.1 கோடி பேர் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 10 லட்சம் அதிகம்.
கடுமையான கோடை வெயில், தேர்தல் நடத்தை விதிகள், தேர்தல் கெடுபிடி ஆகியவற்றுக்கு மத்தியிலும் அதிகமான மக்கள் திருச்சிக்கு சுற்றுலா வந்துள்ளனர். சென்னை கூட அந்த அளவுக்கு ஆட்களை ஈர்க்கவில்லை. இதற்கிடையே சுற்றுலா பயணிகளின் வருகையை தக்க வைக்க பொது கழிப்பறைகள் மற்றும் தங்குமிட வசதிகளை மேம்படுத்த வேண்டும், வாகன நிறுத்துமிடம், குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருச்சியில் இந்த ஆண்டு இறுதிக்குள் 3.5 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுற்றுலா துறை மற்றும் வனத்துறை இணைந்து பச்சைமலை, புளியஞ்சோலை மற்றும் முக்கொம்பு ஆகிய இடங்களை சுற்றுலா தலங்களாக மேம்படுத்தி வருகின்றன. பச்சைமலையில் சாகச விளையாட்டு பூங்காவும், புளியஞ்சோலையில் குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் சாலை வசதிகளும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தினால் வெளிமாநில சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாகும் என சுற்றுலா துறையினர் கூறுகின்றனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு திருச்சியை தமிழ்நாட்டின் சுற்றுலா மையமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications

