ஈரான் போர் காரணமாக எல்பிஜி கேஸ் விலை உயர்ந்தது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என உணவகங்களில் எல்லாம் உணவு பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. டீ, காஃபி தொடங்கி இட்லி, மீல்ஸ், பிரியாணி வரை அனைத்துமே தாறுமாறாக விலை உயர்ந்து நிற்கின்றன.
உணவகங்களில் உணவுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குறிப்பாக சுற்றுலா செல்ல கூடியவர்கள் கடும் சிரமத்திற்கும் நிதி சுமைக்கும் ஆளாகிறார்கள். ஏற்கனவே சுற்றுலா தளங்களில் வழக்கத்தை விட உணவு விலை கூடுதலாக தான் இருக்கும். தற்போது விலைவாசியும் உயர்ந்துவிட்டதால் முன்பை விட அதிக தொகையை உணவுக்காகவே செலவிட வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் இனி அந்த பிரச்சினை இல்லை. சுற்றுலா தளங்களில் 99 ரூபாய்க்கே சுட சுட சிக்கன் பிரியாணி கிடைக்கும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) அதிரடி நடவடிக்கையாக தனது உணவகங்களில் சிக்கன் பிரியாணியை வெறும் 99 ரூபாய்க்கு விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.

சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும், குறைந்த விலையில் தரமான உணவுகளை பொதுமக்களுக்குக் கொண்டு செல்லவும் இந்த முயற்சியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முன்னெடுத்துள்ளது. இதன்படி 99 ரூபாய்க்கு தலா 450 முதல் 500 கிராம் வரை எடை கொண்ட சிக்கன் பிரியாணி கிடைக்கும். பிரியாணியுடன் வெங்காயப் பச்சடி மற்றும் கத்திரிக்காய் குழம்பு (Brinjal Gravy) இலவசமாக வழங்கப்படும்.
இந்த சலுகை தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 21 தேர்ந்தெடுக்கப்பட்ட TTDC உணவகங்களில் மட்டும் வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஊட்டி, கொடைக்கானல், கோயம்புத்தூர், ஓசூர், ராணிப்பேட்டை, சிதம்பரம் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் இந்தத் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆரம்பகட்டமாக, வாரத்திற்கு சுமார் 4,200 தட்டு பிரியாணி விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வி.பி. ஜெயசீலன் அளித்துள்ள பேட்டியில் "எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ள சூழலில், பொதுமக்களுக்குக் தரமான உணவை மலிவு விலையில் வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இந்த 99 ரூபாய் என்பது ஒரு விளம்பர விலை . உணவின் தரத்தை குறைக்காமல், மூலப்பொருட்களை சிக்கனமாக கொள்முதல் செய்தல், தரப்படுத்தப்பட்ட சமையல் முறைகள் மற்றும் நவீன சமையலறை மேலாண்மை மூலம் இந்த செலவை சமாளிக்கிறோம் என தெரிவித்துள்ளார். பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து, இந்த திட்டத்தை தமிழகத்தின் அனைத்து சுற்றுலா தலங்களிலும் உள்ள உணவகங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
வழக்கமாக சுற்றுலா தளங்களில் உணவுகளின் விலை அதிகமாக தான் இருக்கும். இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் இந்த முயற்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கோடைக்கால சுற்றுலா பயணிகளுக்கும், வார இறுதி நாட்களில் வெளியே செல்லும் குடும்பங்களுக்கும் 99 ரூபாய் சிக்கன் பிரியாணி திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சுற்றுலா செல்லும் குடும்பங்கள் தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் உணவகங்களுக்கு சென்றால் குறைந்த விலையில் பிரியாணியை ருசிக்கலாம்.


Click it and Unblock the Notifications

