நடப்புக் காரிஃ பருவத்தில் நெல் விதைப்பு ஆகஸ்ட் 5 வரை 13% குறைந்துள்ளது, இதற்கு முக்கியக் காரணம் நெல் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் மழைப் பற்றாக்குறை தான்.
இதே காரணத்தால் தான் கோதுமை உற்பத்தியும் பெரிய அளவில் குறைந்து, இந்தச் சூழ்நிலையில் அரசு தானிய கொள்முதல் அளவுகளை வெகுவாகக் குறைந்துள்ளது.
மேலும் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலை கடந்த ஆறு வாரங்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
நெல் சாகுபடி பரப்பளவு
திங்கள்கிழமை வேளாண் அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவரப்படி நெல் சாகுபடி பரப்பு 274.30 லட்சம் ஹெக்டேராக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நெல் சாகுபடி பரப்பு 314.14 லட்சம் ஹெக்டேராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய மாநிலம்
அதிக நெல் உற்பத்தி செய்யும் மாநிலமான மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நெல் விதைப்புச் செய்யப்பட்ட பரப்பளவு குறைந்துள்ளது.
மழை பற்றாக்குறை
ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலவரப்படி மேற்கு உத்தரப் பிரதேசத்தில் 36% மழைப் பற்றாக்குறை உள்ளது, கிழக்கு உ.பி.யில் 43% பற்றாக்குறை உள்ளது. பீகார் மற்றும் ஜார்கண்டில் தத்தம் 38% மற்றும் 45% மழைப் பற்றாக்குறை உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தரவுகளின்படி மேற்கு வங்கத்தில் 46% குறைவான மழை பெய்துள்ளது.
துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு
துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலை கடந்த ஆறு வாரங்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. விளைநிலத்தில் தண்ணீர் தேங்குவதால் பயிர் சேதம், நடப்பு காரீப் பருவத்தில் விளை நிலப்பரப்பில் சிறிய அளவிலான சரிவு ஆகியவை பற்றாக்குறையை அதிகரித்து விலையையும் அதிகரித்துள்ளது.
ஆறு வாரங்கள்
மகாராஷ்டிராவில் உள்ள லத்தூரில் நல்ல தரமான துவரம் பருப்பின் விலை மில்-க்கு வெளியில் ஆறு வாரங்களுக்கு முன்பு 97 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 115 ரூபாயாக அதிகரித்துள்ளது. வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய விதைப்புத் தரவுகளின்படி, துவரம் பருப்பு விளைநில பரப்பு 4.6% குறைவாக உள்ளது.
விலை உயர்வு
அதிகப்படியான மழை பெய்து வருவதால் உளுந்தம் பயிர் அதிகளவில் சேதமடைய வாய்ப்புள்ளது. இருப்பினும், இறக்குமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விநியோகத்தில் பிரச்சனை இருக்காது ஆனால் விலை உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மழை தான் பிரச்சனை
நெல், கோதுமை விளைவிக்கும் பகுதியில் மழை பற்றாக்குறையாலும், தானியங்கள் விளைவிக்கும் பகுதியில் அதிகப்படியான மழை பெய்யும் காரணத்தாலும் தற்போது உணவு பொருட்கள் விநியோகத்தில் பிரச்சனை உருவாகியுள்ளது. IMD அமைப்பு ஏற்கனவே நாடு முழுவதும் மொத்த மழை பொழிவு அதிகமாக இருந்தாலும், சீரற்று இருக்கும் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.