அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம் 2 நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை உலகமே உற்றுநோக்கிய நிலையில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் கெவின் வார்ஷ் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது தனது வட்டி விகிதத்தை 3 ஆண்டுகளுகு பின் 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தியுள்ளது. வரும் மாதங்களிலும் வட்டி விகிதங்கள் மேலும் உயர்த்தப்படலாம் என்பதற்கான அறிகுறிகளையும் வெளிப்படுத்தியுள்ளது.தொடர்ந்து நான்கு கூட்டங்களாக வட்டி விகிதத்தை மாற்றாமல் சீராக வைத்திருந்த ஃஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி , இக்கூட்டத்தில் ஒருமனதாக வாக்களித்து ஃபெடரல் நிதி வட்டி விகிதத்தை 3.75% - 4% ஆக உயர்த்தியுள்ளது.

தொடர்ச்சியான விலை அழுத்தங்கள் மற்றும் வலுவான பொருளாதார தரவுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முக்கிய நோக்கமான 2% பணவீக்கம் என்ற இலக்கை மீண்டும் அடைவதற்காகவே இந்த வட்டி உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.
இதற்கு முன்பு கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 26 அன்றுதான் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியிருந்தது. அதன் பின்னர் வட்டி விகிதம் மாறாமலே இருந்த நிலையில் கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு பின் வட்டி விகிதத்தை உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட்டி விகிதங்களை குறைக்குமாறு ஃபெடரல் வங்கிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். இதனால் தான் அவர் ஃஃபெடரல் தலைவராக கெவின் வார்ஷ் நியமனம் செய்தார். ஆனால் ஈரான் போர்ச்சூழல் காரணமாக எரிசக்தி விலைகள் உயர்ந்தே காணப்படுவது ஃபெடரல் வங்கியின் கொள்கை முடிவுகளை சிக்கலாக்கியுள்ளது.
இதனால் ஏற்பட்ட விலைவாசி உள்ளிட்டவற்றை காரணமாக கூறி வட்டியை உயர்த்தியுள்ளனர். வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால் இனி முதலீட்டாளர்கள் வட்டி வருமானம் தரும் அமெரிக்க பத்திரங்களில் அதிக முதலீடு செய்வார்கள். இது நேரடியாக தங்கம் விலையில் தான் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஃபெடரல் வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பு வெளியான உடனே உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டின் விலை 4,358 டாலரில் இருந்து 4,252 டாலராக சர்ரென குறைந்தது. தற்போது 4,290 டாலராக வர்த்தகமாகி வருகிறது. உலக சந்தையில் தங்கம் விலை சரிவால் இந்தியாவிலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.
ஏனெனில் தற்போது தங்கத்தை விட அதிகமாக ஈர்க்கும் ஒரு முதலீடாக பத்திரங்கள் மாறியுள்ளன. எனவே பெரும் முதலீட்டாளர்கள் பணத்தை தங்கத்தில் இருந்து எடுத்து ப்த்திரங்களில் தான் முதலீடு செய்வார்கள். எனவே தங்கம் டிமாண்ட் குறைந்து விலை குறையும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
அது மட்டுமில்லாமல் இந்த ஆண்டின் இறுதிக்குள் வட்டி விகிதங்கள் 4.00% - 4.25% என்ற அளவை எட்டிவிட்டு, 2027 வரை அதே அளவில் தொடரும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இது தங்கம் விலையின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இந்த வட்டி உயர்வு அமெரிக்க டாலரை வலுப்படுத்தக்கூடும். வலுவான டாலர் மதிப்பு மற்ற நாடுகளின் நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு தங்கத்தையும் வெள்ளியையும் விலை உயர்ந்ததாக மாற்றும். இது தேவையை மந்தமாக்கி விலையை குறைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications


