அண்மை காலமாக ஊழியர்கள் பணிநீக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. பெரிய நிறுவனங்கள் தொடங்கி சிறு நிறுவனங்கள் வரை ஏஐ, சிக்கன நடவடிக்கை என பலவற்றை காரணமாக கூறி ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்று, தனது ஒட்டு மொத்த இந்திய ஊழியர்களையும் ஒரே மீட்டிங்கில் பணிநீக்கம் செய்து அதிர்ச்சியை தந்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் ரெடிட் தளத்தில் Laid off over a Google Meet என்ற தலைப்பில் இந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில் வழக்கமான பணி நாளான அன்று, ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி நிறுவனம் கேட்டு கொண்டது. நான் மாலை 6:30 மணி ஷிஃப்ட்டில் வேலை செய்தேன், இரவு சரியாக 9:30 மணியளவில் உயர் அதிகாரிகளிடமிருந்து ஒரு கூகுள் மீட் அழைப்பு வந்தது. அந்த மீட்டிங்கில் இணைந்த ஊழியர்களுக்கு, அமெரிக்க நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இந்திய வாடிக்கையாளர் சேவை பிரிவில் வேலை செய்யும் அனைவரையும் பணிநீக்கம் செய்கிறோம் என அறிவித்தனர். வெறும் 5 நிமிடங்களுக்குள் எல்லாமே முடிந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.

5 நிமிட மீட்டிங்கில் ஒட்டுமொத்தமாக 80 ஊழியர்களும், அவர்களின் குடும்பங்களும் நடுத்தெருவிற்கு வந்துவிட்டதாக அந்த ஊழியர் வேதனை தெரிவித்துள்ளார். எந்த நேரத்திலும் நம்மைத் தூக்கி எறியும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நாம் உழைக்கிறோமே என இப்போது வெட்கப்படுகிறேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேலை போய்விடுமோ என்ற பயத்தில் எங்கள் எல்லையை மீறி கடுமையாக உழைத்தோம்; ஆனால் இப்படி நடக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியக் குழுவிடம் இருந்து தாங்கள் எதிர்பார்த்த அவுட்புட் வரவில்லை என நிறுவனம் தரப்பில் காரணம் கூறப்பட்டதாம், ஆனால் அது முற்றிலும் பொய் என்கிறார். அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் அதிகமாக ராஜினாமா செய்வது போதிய அவுட்புட் தராமல் இருப்பது என இருந்தனர். இந்தியாவில் நாங்கள் பணி பாதுகாப்பு கருதி எப்போதும் எங்களது முழு திறனையும் மீறி கடுமையாக உழைத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஏதேனும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு, முறையான நஷ்ட ஈடு இல்லை என்றும், ஒரு வருடம் வேலை செய்தவர்களுக்கு மட்டுமே அவர்கள் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டிற்கும் 15 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நினைத்த உடனே ஊழியர்களை வேலையில் இருந்து தூக்கி எறிவது சாதாரண விஷயமாகிவிட்டது. ஒரு ஈமெயில் ஒரு மீட்டிங் என நொடிப்பொழுதில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன. இதனால் அந்த ஊழியர் மட்டுமல்ல அவர்களின் குடும்பமும் ஒரே நாளில் வருமானத்தை இழந்து நிற்கதியாக நிற்கின்றன.


Click it and Unblock the Notifications


