கொரோனா காரணமாக வல்லரசு நாடான அமெரிக்காவில் கடந்த 10 வாரங்களாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து விதமான வர்த்தகம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாகக் கடந்த 10 வாரத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகப் பதிவு செய்து அமெரிக்க அரசு கொடுக்கும் சலுகையைப் பெற்றுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வேலைவாய்ப்பை இழந்ததாகப் பதிவு செய்தோர் எண்ணிக்கை 21 லட்சமாக உள்ளது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு இழப்பு அனைத்தும் அமெரிக்க அரசு லாக்டவுன் அறிவித்த நாளில் இருந்து தான் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே நிலையில் தான் உள்ளது.
வேலையின்மை விகிதம்
அமெரிக்காவில் மார்ச் மாதம் வெறும் 4.4 சதவீதமாக இருந்த unemployment rate ஏப்ரல் மாதம் 14.7 சதவீதமாக உயர்ந்தது. மேலும் ஏப்ரல் மாதம் மட்டும் சுமார் 2 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியாக ஒரு வாரத்தில் 66 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளனர். அதன் பின்பு படிப்படியாகக் குறைந்து இந்த வாரம் 21 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளனர்.
முக்கியத் துறை
கொரோனாவால் அமெரிக்க வர்த்தகத்தில் ஒவ்வொரு துறையிலும் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பைச் சந்தித்து. இதனால் அனைத்து துறைகளும் அதிகளவிலான வேலைவாய்ப்பை இழந்துள்ளது.
அமெரிக்க வர்த்தகத்தில் பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் துறை தான் 48 லட்ச வேலைவாய்ப்புகளை இழந்துள்ளது. இந்த எண்ணிக்கை மொத்த இத்துறையின் மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் 40 சதவீதமாகும்.
பிற முக்கியத் துறை
பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் துறையைத் தாண்டி அமெரிக்காவில் வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட துறை என்றால் அது கல்வி மற்றும் சுகாதாரச் சேவைத் துறை, ரீடைல் துறை மற்றும் உற்பத்தித் துறை ஆகியவை அடுத்தடுத்து பாதிப்படைந்துள்ளது.
மொத்த எண்ணிக்கை
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 10 வாரங்கள் ஆகியும் வேலை இழந்தோர் எண்ணிக்கையை முழுமையாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறது அமெரிக்க அரசு. இதற்கு முக்கியக் காரணம் தொடர்ந்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பது ஒரு பக்கம், பதிவு செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகளவிலேயே இருப்பதால் இன்னும் எத்தனை பேர் வேலையை இழந்துள்ளனர் என்பது தெரியவில்லை.
50 மாநிலங்கள்
இந்தியாவைப் போல் அமெரிக்காவிலும் கடந்த சில வாரங்களில் பல்வேறு தளர்வுகள் வர்த்தகச் சந்தை இயங்க துவங்கியுள்ளது. இந்த நடவடிக்கை பொருளாதாரத்திற்குப் பயன்பட்டாலும், வேலைவாய்ப்புச் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
இந்தியாவில் நிலைமை இன்னும் மோசம்.. மக்கள் இன்னும் சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.