இந்தியாவில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது கிரீன் எனர்ஜியில் அதிகளவிலான முதலீட்டை செய்து வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் நிலையில், தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கௌதம் அதானியின் அதானி கிரீன் எனர்ஜிக்குப் போட்டியாக டாடா குழுமத்தின் டாடா பவர் நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது.
டாடா பவர் நிறுவனம் தனது மின்சார உற்பத்தி மற்றும் எலக்ட்ரிக் கார் சார்ஜிங் சேவை மூலம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் இதே வேளையில் சோலார் மற்றும் இதர கிரீன் எனர்ஜி சேவையில் பல புதிய திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக டாடா நிர்வாகம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வெளி சந்தையில் இருந்து முதலீட்டை திரட்டியது போலவே டாடா பவர் நிறுவனத்தில் முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.
பிளாக்ராக்
அமெரிக்கச் சந்தையில் கிரீன் எனர்ஜி பிரிவில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ள முன்னணி பங்கு முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் இந்தியாவில் டாடா பவர் நிறுவனத்தில் முதலீடு செய்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில் டாடா பவர் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடாகப் பெறும்.
டாடா பவர்
பிளாக்ராக் நிறுவனத்தின் தலைவரான சிஇஓ லேரி ஃபிங்க் டாடா பவர் நிறுவனத்தின் கிளை நிறுவனமானTata Power Renewable Energy Ltd (TPREL) நிறுவனத்தில் 500 முதல் 750 மில்லியன் டாலர் அதாவது 3,750 கோடி ரூபாயில் இருந்து 5,625 கோடி ரூபாய் வரையிலான தொகையை முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
5 பில்லியன் டாலர் மதிப்பீடு
இந்த முதலீட்டுச் சுற்றில் டாடா பவர் நிறுவனம் சுமார் 5 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டு உள்ளது. பிளாக்ராக் சிஇஓ லேரி ஃபிங்க் தான் உலகளவில் கிரீன் எனர்ஜி மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த முதலீட்டில் அதிகம் லாபம் அடைந்தவர்.
9.46 டிரில்லியன் டாலர் சொத்து
லேரி ஃபிங்க் தலைமையிலான பிளாக்ராக் நிறுவனம் தான் உலகிலேயே மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாகும். இந்நிறுவனம் நேரடியாகவும் அதன் கிளை நிறுவனத்தின் வாயிலாகவும் உலகம் முழுவதும் இருக்கும் நிறுவன பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. இந்நிறுவனத்தின் கீழ் சுமார் 9.46 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது.