டெல்லி: பில்லியனர் அனில் அகர்வாலின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் தான் வேதாந்தா. இந்த நிறுவனம் கடந்த மாதத்தில் தான், பங்கு சந்தையில் இருந்து டிலிஸ்ட் செய்ய அனுமதி கோரியது.
ஆனால், அதற்கு சரியான ஒப்புதல் கிடைக்கவில்லை. இதற்கிடையில் தான் வேதாந்தா நிறுவனம், ஒரு பங்குக்கு 9.5 ரூபாயினை டிவிடெண்டாக அறிவித்தது.
இந்த டிவிடெண்டிற்காக 3,500 கோடி ரூபாயினை செலவிட வேண்டும் என்றும் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த டிவிடெண்டினை அக்டோபர் 31 அன்று செலுத்துவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே, இந்திய பங்கு சந்தையில் இருந்து வெளியேறி, தனியார் நிறுவனமாக மாற இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்திருந்தார். இந்தியாவின் முன்னணி சுரங்க தொழில் நிறுவனமான வேதாந்தாவுக்கு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகளும் உள்ளன. வேதாந்தா நிறுவனத்தின், 50.1% பங்குகள், தற்போது அதன் தாய் நிறுவனமான, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் வசம் உள்ளது. மீதமுள்ள, 49.9% பங்குகள் பொது சந்தையில் உள்ள முதலீட்டாளர்கள் வசம் உள்ளன.
கடந்த 2018 ஆண்டிலேயே, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம், லண்டன் பங்குச் சந்தையிலிருந்து முழுமையாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது. லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் வேதாந்தா என்பதும் கவனிக்கதக்கது. இந்த நிலையில் தற்போது வேதாந்தா நிறுவனம், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து முழுமையாக வெளியேற திட்டமிட்டது.
இந்த நிலையில் வேதாந்தா அக்டோபர் 5ம் தேதி பங்குகளை பெறுவதற்காக ஏலத்தினை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது அக்டோபர் 8 வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த முடிவினை கடந்த மே மாதமே வேதாந்தா அறிவித்திருந்த நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளது.
இதன் மூலம் பொது பங்கு தாரர்களிடம் இருக்கும் 49.49% அல்லது 183.98 கோடி பங்குகளை திரும்ப பெற உள்ளது. ஒரு பங்கின் விலையானது 87.50 ரூபாய்க்கு வாங்க உள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் சிலகாரணங்களால் சந்தையை விட்டு வெளியே செல்ல விண்ணப்பிக்கும். இவற்றில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றும் பட்சத்தில், செபி(SEBI) அந்த நிறுவனத்தை வெளியே செல்ல அனுமதிக்கும். இதன் படி தான் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்படி ஒரு நிலையில் தான் வேதாந்தா நிறுவனம் டிவிடெண்டினை அறிவித்துள்ளது.