தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி , நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவிய சூழலில் தேர்தல் முடிவுகள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமாகவே அமைந்து வருவதை பார்க்க முடிகிறது.
மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 85 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் மக்களின் பேராதரவு யாருக்கு என்ற கேள்வி இருந்தது. மாறி மாறி திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே தமிழகத்தை ஆட்சி செய்து வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்தல் முன்னிலை நிலவரம் மாறி இருக்கிறது.

2024ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கி விஜய் அரசியல் எண்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் விஜய் கட்சி போட்டியிட்டது. முதன் முறையாக விஜய் நேரடியாக களமிறங்கினார். பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டார்.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை எட்டு மணி அளவில் தபால் வாக்குகளும், அதன் பின்னர் இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. முதல் சுற்று முடிவில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் தொடர்ச்சியாக முன்னிலையில் இருந்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி என்ற சாதனையை நிகழ்த்துவோம் என கூறி வந்த திமுக தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இது திமுக தொண்டர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.
தற்போது 106 இடங்களில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் 66 இடங்களுடன் அதிமுக முன்னிலை வகிக்கிறது. திமுக 62 இடங்களில் முன்னிலை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் விசில் சத்தம் சத்தம் கேட்க தொடங்கி இருக்கிறது.
தமிழகத்தில் 1967 லிருந்து திமுக , அதிமுக என மாறிமாறி ஆட்சி நடந்து வந்த நிலையில் இந்த 60 ஆண்டு கால சங்கிலியை தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் உடைத்துள்ளார். 1977 க்கு பிறகு முதன்முறையாக தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் இல்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் நிலை உருவாகி இருக்கிறது. எம்ஜிஆர் எப்படி ஒரே தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தாரோ அதேபோன்ற ஒரு மாற்றத்தை விஜய் இந்த தேர்தலில் கொண்டு வந்திருக்கிறார். கிட்டத்தட்ட 49 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் அது சாத்தியமாகி இருக்கிறது .ஒரு நடிகர் அரசியலில் நுழைந்து முதல் தேர்தலிலேயே ஆட்சி பிடிக்கும் அளவிற்கு முன்னிலை நிலவரங்களை பெற்றிருக்கிறார்.
இந்த தேர்தலில் திமுகவின் முதன்மை தலைவர்கள் அமைச்சர்கள் என பலரும் பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள். இந்த முன்னிலை நிலவரம் அப்படியே தொடரும் பட்சத்தில் 60 ஆண்டு கால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும். இது ஒரு மாற்று அரசியலின் தொடக்கமாக அமையும். சென்னை போன்ற திமுக கோட்டை என அழைக்கப்பட்ட பல தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகிக்கிறது. இதனை தவெக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications


