இந்த லாக்டவுன் காலத்தில் பல ஆயிரம் நிறுவனங்கள் வர்த்தகம் மற்றும் வருவாய் இழந்து தவித்து வந்த நிலையில், டெலிகாம் துறையில் மிகப்பெரிய புரட்சியைச் செய்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து இந்த லாக்டவுன் காலத்திலும் வரலாறு காணாத முதலீட்டை ஈர்த்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் டெலிகாம் சேவை பிரிவு பங்குகளை விற்பனை செய்ததைத் தொடர்ந்து தற்போது ரீடைல் வர்த்தகப் பிரிவின் பங்குகளை விற்பனை செய்து பெரிய அளவிலான நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்கு விற்பனை மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்பார்ப்பையும் நன்மதிப்பையும் பெற்ற நிலையில் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் வரிசைக்கட்டி நிற்கும் காரணத்தால் பல முன்னணி நிறுவனங்களையும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது வெயிட்டிங் லிஸ்ட்-ல் வைத்துள்ளது.
முதல் விற்பனை
கடந்த வாரம் ரிலையன்ஸ் ரீடைல் தனது 1.75 சதவீத பங்குகளைச் சில்வர் லேக் நிறுவனத்திடம் விற்பனை செய்து சுமார் 7, 500 கோடி ரூபாய் அளவிலான நிதியை புதிய முதலீடாகப் பெற்றது அனைவருக்கும் தெரியும்
இதைத்தொடர்ந்து KKR நிறுவனத்திடம் சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீடு ஈர்க்கும் திட்டத்திற்குப் பேச்சுவார்த்தை இறங்கிய அடுத்தச் சில நாட்களில் அமெரிக்காவின் முன்னணி தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான , The Carlyle Group ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் 2 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யப் பேச்சுவார்த்தையைத் துவங்கியது.
டிமாண்ட் அதிகம்
ரிலையன்ஸ் ஜியோ வெற்றியை தொடர்ந்து ரிலையன்ஸ் ரீடைல் பங்குகளுக்குத் தற்போது அதிகளவிலான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் சமீபத்தில் ரிலையன்ஸ் ரீடைல் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்த அமெரிக்காவின் Carlyle Group மற்றும் ஜப்பானின் சாப்ட்பேங்க் ஆகிய நிறுவனங்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெயிட்டிங் லிஸ்ட்-ல் வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
நிதியியல் நிறுவனங்கள்
ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சேவை பிரிவில் முதலீடு செய்த பல நிறுவனங்கள் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திலும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வரும் வேளையில், பழைய பங்கு மற்றும் நிதியியல் முதலீட்டாளர்களுடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன் வாயிலாக அமெரிக்காவின் Carlyle Group மற்றும் ஜப்பானின் சாப்ட்பேங்க் ஆகிய நிறுவனங்களைக் காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
10 சதவீத பங்குகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் தற்போது ரீடைல் பிரிவு வர்த்தகத்தில் 10 சதவீத பங்குகளை மட்டுமே விற்பனை செய்வதாகத் தெரிகிறது. இந்த 10 சதவீத பங்குகளின் மதிப்பு 5.7 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜியோவில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள KKR, L Catterton, அபுதாபியின் முபாதலா முதலீட்டு நிறுவனம், சவுதி பொது முதலீட்டுப் பண்ட் ஆகிய நிறுவனங்கள் ரீடைல் பங்குகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜயோகம்
இந்த லாக்டவுன் காலம் யாருக்கு எப்படியோ, ஆனா நம்ம முகேஷ் அம்பானிக்கு ராஜயோகம் தான், இந்த மோசமான காலத்திலும் ரிலையன்ஸ் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது.
இதோடு வரலாற்று காணாத அளவிற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இதுவரை எந்தொரு இந்திய நிறுவனமும் அடைந்திடாத வகையில் 200 பில்லயன் டாலரை தாண்டி 208 பில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைந்தது.
இதன் எதிரொலியாக முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 88 பில்லியன் டாலர் அளவீட்டை தாண்டி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 5 வது இடத்தைப் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.