டெல்லி: உலகின் மிகப்பெரிய ரீட்டெய்லர் யாரென்று கேட்டால், குழந்தைக்கு கூட தெரியும், அது வால்மார்ட் என்பது. ஆனால், பாருங்க, இந்தியாவில், வால்மார்ட் கால் பதித்து, படாதபாடுபட்டு வருகிறதாம். இதனால் நம்மூர் வியாபாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
வால்மார்ட் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைக்கிறது என்றதுமே, நம்மூர் வியாபாரிகளிடமிருந்து, கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. குர்கானில் வால்மார்ட் இந்தியாவுக்கான தலைமையகத்தை அமைத்து இந்த எதிர்ப்பை மேலும் அதிகரித்தது.
ஆனால், நமது வியாபாரிகள் பயப்படும் அளவுக்கு பிரச்சினை ஒன்றும் இல்லை. ஏனெனில் வால்மார்ட் பல சிக்கல்களில் சிக்கிக்கொண்டுள்ளது.
மூத்த நிர்வாகிகள்
வால்மார்ட், அதன் உயர்மட்ட நிர்வாகிகளில் மூன்றில் ஒரு பகுதியினரை, பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று தி எக்கனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வால்மார்ட் இழப்பை சந்தித்ததுதான், இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வால்மார்ட் வேளாண் வணிகம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் (எஃப்எம்சிஜி) பிரிவுகளில் துணைத் தலைவர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகளை, கடந்த வெள்ளிக்கிழமை, பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. அதன் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கான மும்பை மையத்தை மூடவும், இந்தியாவில் புதிய கடை விரிவாக்கத்தை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது.
சேவை
வால்மார்ட் இந்தியா பணிநீக்கம் செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அல்லது பிற விஷயங்கள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் அது இந்தியாவில் வளர உறுதிபூண்டுள்ளது என்று மட்டும் தெரிவித்து வருகிறது. "நாங்கள் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய மிகவும் திறம்பட செயல்படுவதற்கான வழிகளைத் தேடுகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான சரியான வழியில் நாங்கள் செயல்படுகிறோம் என்பதை உறுதிப்படுத்த எங்கள் நிறுவன கட்டமைப்பை மதிப்பாய்வு செய்ய இது தேவைப்படுகிறது, " என்று வால்மார்ட் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதல் சுற்று
இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதிகமான ஊழியர்கள் வெளியேற வேண்டியிருக்கும். "இது பணிநீக்கத்தின் முதல் கட்டமாகும், அடுத்த சுற்றுகளை, ஏப்ரல் மாதத்திற்குள் எதிர்பார்க்கிறோம்" என்று வால்மார்ட் நிறுவனத்திற்கு நெருக்கமான, நபர்களில் ஒருவர் கூறினார்.
மெட்ரோவுக்கு லாபம்
வால்மார்ட் இந்தியாவின் சிறந்த விலைக் கடைகள் (பெஸ்ட் ப்ரைஸ் ஸ்டோர்ஸ்) 2019, மார்ச் மாதம், வரை 2,180.8 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தன. கடந்த நிதியாண்டில், வால்மார்ட் இந்தியா ரூ .4,095 கோடிக்கு விற்பனை செய்தது. ஆனால், நிகர இழப்பு ரூ .171.6 கோடி. 2003 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குள் நுழைந்த வால்மார்ட்டின் போட்டியாளர் 'மெட்ரோ,' 27 கடைகள் வைத்துள்ளது. ஆனால், 6,500 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது.
வால்மார்ட் வருகை
வால்மார்ட் 2007ல் இந்தியாவில் நுழைந்தது. மொத்த வியாபாரத்தில் பாரதி குழுமத்துடன் கூட்டு சேர்ந்து, பங்குதாரரின் 50% பங்குகளை வாங்கியது. இது 2013 ஆம் ஆண்டில் பாரதியின் சில்லறை வணிகம் தொடர்பான உரிம மற்றும் விநியோக ஒப்பந்தங்களை நிறுத்தியது. வால்மார்ட்டின் கடை விரிவாக்கம் 2012 முதல் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
வணிகர்கள் மகிழ்ச்சியாம்
இதுகுறித்து, தமிழ்குட்ரிட்டர்ன்ஸ்சிடம் பேசிய, பெயர் வெளியிட விரும்பாத, தமிழக வணிகர் சங்க நிர்வாகி ஒருவர், கூறுகையில், "வால்மார்ட் நிறுவனம் நமது உள்ளூர் வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிடும் என்பதுதான் வணிகர்கள் ஆதங்கமாக இருந்தது. மெட்ரோவும் குறைந்த விலையில் பொருட்கள் கொடுக்கிறது. இருப்பினும், அதனால், வணிகர்கள்தான் லாபம் பெறுகிறார்கள். அங்கு வணிகர்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன. எனவே பிரச்சினை இல்லை. அதேநேரம், ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகத்தால், அவதிப்படும், நமது உள்ளூர் வணிகர்களுக்கு, வால்மார்ட் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்த்தோம். வால்மார்ட் மீதான, அரசின் சில கெடுபிடிகள் காரணமாக, நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கான கவலை ஏற்படுத்தும் நிலை உருவாகவில்லை" என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications