பெங்களூரு: அமெரிக்காவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான வால்மார்ட், டாடா குழுமத்தின் சூப்பர் ஆப்பில் 25 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.
சற்று முன்பு தான் டாடா குழுமம், தனது ஆன்லைன் டிஜிட்டல் வணிகத்தினை தொடங்குவதற்காக, சர்வதேச முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறினோம்.
இந்த நிலையில் தான் வால்மார்ட் நிறுவனம் டாடா குழுமத்தில் முதலீடு செய்யலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
வால்மார்ட் + டாடா கூட்டணியில் சூப்பர் ஆப்
இது குறித்து வெளியான ndtv.comமில் வெளியான செய்தியொன்றில், வால்மார்ட் நிறுவனம், டாடா குழுமத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கு இடையில் நடந்து வரும் பேச்சு வார்த்தையில், இந்த இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் சூப்பர் ஆப்பினை அறிமுகப்படுத்த முடியும், இது டாடாவின் இ-காமர்ஸ் வணிகத்திற்கும், வால்மார்டின் பிளிப்கார்டுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோமார்ட் முதலீடு திரட்டல்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, பேஸ்புக் முதல் கூகுள் வரை, சில்வர் லேக் பார்ட்னர்ஸ், KKR& கோ, சவுதி முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல முதலீட்டாளர்களிடம் இருந்து, தனது டிஜிட்டல் வணிகத்தினை மேம்படுத்த 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான டாலர் முதலீடுகளை திரட்டியது. அதோடு ஆன்லைன் வர்த்தகத்தினை மேம்படுத்தவும் பல்வேறு வகையான முதலீடுகளை திரட்டி வருகின்றார்.
எவ்வளவு முதலீடு
இந்த நிலையில் தான் டாடா குழுமமும் தனது புதிய இ- காமர்ஸ் வணிகத்திற்காக முதலீட்டாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், வால்மார்ட் நிறுவனம், டாடா சன்ஸ் பிரிவின் கீழ் வழங்கப்படும், சூப்பர் ஆப்பில் 20 - 25 பில்லியன் வரை முதலீடு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது தொடக்கம்?
இந்த சூப்பர் ஆப் இந்த ஆண்டின் டிசம்பரில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்டில் 16 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து, 66 சதவீதம் பங்குகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நிலையில் மற்றொரு மாபெரும் கூட்டணியினால் வால்மார்ட் இணைவது, இந்தியாவில் தனது நிலையை வலுப்படுத்திக் கொள்கிறது என்றே கூறலாம்.