பட்ஜெட் 2022-க்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இதற்கிடையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கோரிக்கையினை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில் நாம் இன்று பார்க்கவிருப்பது பட்ஜெட் தினத்தன்று, பங்கு சந்தைகளின் நிலவரம் எப்படியிருக்கும்?
கடந்த 10 ஆண்டுகளில் நிலவரம் என்ன? சரிவா? ஏற்றமா? எப்படியிருந்தது? இந்த ஆண்டு எப்படியிருக்கும்? என்பதைத் தான் பார்க்க இருக்கிறோம்.
மிகப்பெரிய ஏற்றம்
பொதுவாக பட்ஜெட் தினத்தன்று ஒவ்வொரு துறைக்கும் எந்த மாதிரியான சாதகமான அறிவிப்புகள் வந்துள்ளது என்பதை பொறுத்து பங்குகள் இருக்கும். கடந்த 2021 - 22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டினை தாக்கல் செய்த நிலையில், பெரும் உச்சத்தினை எட்டியது. சொல்லப்போனால் 1997ம் ஆண்டுக்கு பிறகு பட்ஜெட் தினத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டது இதுவே முதல் முறை.
10 ஆண்டு நிலவரம்
எனினும் அதற்கு முந்தைய பிப்ரவரி 2011 முதல் பிப்ரவரி 2020 வரையிலான 10 பட்ஜெட் தினங்களில் 6 முறை சரிவினையே எட்டியது. மீதமிருக்கும் 4 முறைகள் மட்டுமே ஏற்றம் கண்டது. எனினும் அதுவும் பெரியளவிலான ஏற்றம் என்பது இல்லை. கடந்த 2021ம் ஆண்டில் தான் சென்செக்ஸ் ஒரே நாளில் 5% அல்லது 2314 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 48,600 புள்ளிகளாக இருந்தது.
ஆறு முறை வீழ்ச்சி
மார்ச் 2016- 209.65 புள்ளிகள் அல்லது 1.19% வீழ்ச்சி
பிப்ரவரி 2013 - 291 புள்ளிகள் அல்லது 1.52% வீழ்ச்சி
ஜூலை 2014 - 72 புள்ளிகள் வீழ்ச்சி
பிப்ரவரி 2016 - 152 புள்ளிகள் வீழ்ச்சி
பிப்ரவரி 2018 - 58.36 புள்ளிகள் வீழ்ச்சி
பிப்ரவரி 2020 - 988 புள்ளிகள் வீழ்ச்சி
4 முறை ஏற்றம்
பிப்ரவரி 2011 - 122.49 புள்ளிகள் ஏற்றம்
பிப்ரவரி 2015 - 141.38 புள்ளிகள் ஏற்றம்
பிப்ரவரி 2017 - 485.66 புள்ளிகள் ஏற்றம்
பிப்ரவரி 2019 - 213 புள்ளிகள் ஏற்றம்
2020க்கு பிறகு தாக்கல் செய்த 2021 பட்ஜெட்டில் சென்செக்ஸ் 2314 புள்ளிகள் ஏற்றம் கண்டும் முடிவடைந்திருந்தது.
நடப்பு ஆண்டு நிலவரம்?
நடப்பு ஆண்டினை பொறுத்தவரையில் ஒமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சில கட்டுப்பாடுகள் விதிகப்பட்டுள்ளன. எனினும் பெரியளவிலான தாக்கம் என்பது இல்லை. இதற்கிடையில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ள தொழில்துறையை ஊக்குவிக்கும் விதமாக இருந்தால், இந்தாண்டும் களைகட்டலாம். என்னதான் நடக்கிறது என சில தினங்கள் பொறுத்திருந்து தான் பார்ப்போமே.