இந்திய பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பாங்க் ஆ பரோடா ஆகிய வங்கிகளில் வாராக் கடன் அளவு ஒவ்வொரு காலாண்டும் அதிகரித்து வரும் நிலையில், இவ்வங்கியின் நிதி நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இந்த 4 முக்கிய வங்கிகளின் மொத்த கடனில் வர்த்தகத்தில் 16.2 முதல் 17.6 சதவீதம் வரையிலான கடன்கள் திரும்பி வராத நிலையில் உள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்சனையைக் கையாளுவதற்காகவே தனியாக ஒரு வங்கியை உருவாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாராக் கடன் வங்கி
சமீபத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வாராக் கடனை வசூலிப்பதற்காகச் சிறப்பு வங்கியை உருவாக்கும் திட்டம் குறித்துப் பேசினார். வாராக் கடனுக்குத் தனியாக வங்கியை அமைக்கும் திட்டம் அரசிடம் இருந்தால், அதற்கான சொத்து மறுசீரமைப்பு விதிகள் உள்ளது என விளக்கம் அளித்தார்.
சிறப்பு வங்கி
வாராக் கடனுக்காகச் சிறப்பு வங்கி அமைக்கப்பட்டால் பொதுத்துறை வங்கியில் இருக்கும் அனைத்து வராக் கடனும் இப்புதிய வங்கிக்கு மாற்றப்பட்டுப் பொதுத்துறை வங்கியின் நிதிநிலை மேம்படுத்தப்படும். இதனால் பொதுத்துறை வங்கிகளின் நிதிநிலை மட்டும் அல்லாமல் சந்தை மதிப்பும் பெரிய அளவில் உயரும்.
பொதுத்துறை வங்கிகள் நிம்மதி
மேலும் வாராக் கடனை வசூலிக்கும் பணி, கடனுக்கான தீர்வு காணும் பணி அனைத்தையும் இந்தப் புதிய வங்கிகள் மேற்கொள்ளும், புதிய வர்த்தகத்தை ஈர்க்கும் பணியும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணிகளையும் பொதுத்துறை வங்கிகள் செய்யும். இதனால் அடுத்தச் சில வருடத்திற்குள் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் நிதிநிலை மேம்பட்டு பெரிய அளவில் முன்னேற்றம் அடையும்.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே இந்தியா இதுவரை பார்க்காத பட்ஜெட் அறிக்கையைப் பார்க்கப்போகிறது எனத் தெரிவித்த நிலையில், இந்த வாராக் கடனுக்கான வங்கி மிகப்பெரிய அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்புதிய வங்கியின் செயல்பாடுகள் இந்திய வங்கித்துறையைப் பெரிய அளவில் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி தேவைக்கான தீர்வு
மேலும் இப்புதிய வாராக் கடன் வங்கிக்கு அதிகளவிலான நிதி தேவை இருக்கும் காரணத்தால் இதை எப்படி மத்திய அரசும், பொதுத்துறை வங்கிகளும் செயல்படுத்தப் போகிறது என்ற கேள்வியும் உள்ளது. குறிப்பாக இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வாராக் கடன் மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும்? இந்தச் சிறப்பு வங்கிக்கு யார் தலைவர்..? எனப் பல கேள்விகள் இந்த அறிவிப்பைச் சுற்று எழுந்துள்ளது.