மார்ச் மாதத்தில் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 6.95 சதவீதம் வரையில் அதிகரித்து 17 மாத உயர்வைத் தொட்டு உள்ளது, இதன் மூலம் சமையல் எண்ணெய், சிக்கன், ஆடை முதல் பாத்திரங்கள் வரையில் அனைத்து முக்கிய வீட்டு உபயோக பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அதிகப்படியான பணவீக்க இலக்கான 6 சதவீதத்தை மார்ச் மாதம் தாண்டியுள்ளது, பெரும் பாதிப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எந்தப் பொருட்கள் எவ்வளவு விலை உயர்ந்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.
சமையல் எண்ணெய்
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாகச் சமையல் எண்ணெய்யின் விநியோகம் தடைப்பட்டதால், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய் விலை மார்ச் மாதத்தில், பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் 10.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 19.2% அதிகரித்துள்ளது.
கோழிக் கறி
மேலும் உள்நாட்டுப் பொருளான கோழிக் கறியின் விலைகள் மார்ச் மாதத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 20.7 சதவீதமும், கடந்த மாதம் அதாவது பிப்ரவரி மாதத்தை விடவும் 13.2 சதவீதம் அதிகரித்து உள்ளது. உள்நாட்டுப் பொருட்கள் விலை உயர மூலப்பொருட்கள் விலை உயர்வும், எரிபொருள் விலை உயர்வும் தான் காரணம்.
காய்கறிகள்
இதேபோல் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் உருளைக்கிழங்கு விலை 20.4 சதவீதமும், தக்காளி 18.5 சதவீதமும், அரிசி 3.6 சதவீதமும், கோதுமை 20.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேலும் வெங்காயம் விலை கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 9.2 சதவீதம் குறைவாக உள்ளது.
எலுமிச்சை, பச்சை மிளகாய்
பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் எலுமிச்சை விலை 29.28 சதவீதமும், பச்சை மிளகாய் விலை 20.86 சதவீதமும் வரையில் உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாகத்தில் மார்ச் மாதம் எலுமிச்சை விலை கோடை வெயிலின் காரணமாக ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வீட்டு உபயோக பொருட்கள்
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஹேர் ஆயில், ஷாம்பூ விலை 6.7 சதவீதமும், சோப் 13.4 சதவீதமும், டூத்பேஸ்ட் 6.1 சதவீதமும், ஆடை மற்றும் காலணி 9.4 சதவீதமும், மொபைல் போன் 7.6 சதவீதமும், விமானக் கட்டணம் 31.4 சதவீதமும், மண்ணெண்யை 65.2 சதவீதமும், பெட்ரோல் 10.2 சதவீதமும், டீசல் 5.2 சதவீதமும், எல்பிஜி 10 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
கிராமங்கள்
இந்த விலைவாசி உயர்வு பெரு நகரங்களைக் காட்டிலும் கிராமங்களைத் தான் அதிகளவில் பாதித்துள்ளது. இந்த நிலையில் விலைவாசி உயர்வைச் சமாளிக்கும் வகையில் மக்களின் சம்பள உயர்வு அதிகரிக்கப்பட்டு உள்ளதா என்பது தான் முக்கியமான கேள்வி.
சம்பளம்
தற்போது வேலைவாய்ப்புச் சந்தையில் இந்திய நிறுவனங்களில் புதிதாக ஒரு நிறுவனத்தில் சேரும் போது அதிகப்படியான சம்பளம் கிடைக்கிறது. ஆனால் ஏற்கனவே இருக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிகப்படியாக 10 - 12 சதவீதமும், குறைவாக 5 சதவீத சம்பள உயர்வு மட்டுமே அளிக்கப்படுகிறது.