யெஸ் பேங்கில் ஒரு பக்கம் வாரா கடன்கள் அதிகரித்துவிட்டது. மறு பக்கம் புதிதாக கடன் கொடுக்க போதுமான நிதி இல்லை.
புதிதாக கடன் கொடுக்க பணத்தை திரட்டச் சொன்னது ஆர்பிஐ. ஆனால் குறித்த நேரத்தில் யெஸ் பேங்கால் பணத்தை திரட்ட முடியவில்லை.
நிறைய டெபாசிட் பணம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருந்தது. அதனால் தான் 50,000 ரூபாய் மட்டுமே டெபாசிட்டர்கள் பணத்தை எடுக்கலாம் எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.
50,000 கட்டுப்பாடு
யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்கிற கட்டுப்பாடு வரும் ஏப்ரல் 03, 2020 வரை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. சரி ஒருவேளை யெஸ் பேங்கில் சம்பளக் கணக்கு இருந்தால் என்ன செய்வீர்கள்..? என்ன செய்ய வேண்டும் என்பதைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
5 லட்சம் வரம்பு
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிப் பிரச்சனையை நினைவில் வைத்துக் கொண்டு, இந்த முறை மத்திய ரிசர்வ் வங்கி ஆறுதலாக ஒரு விஷயத்தைச் செய்து இருக்கிறது. அது தான் 5 லட்சம் ரூபாய் வரைக்குமான வரம்பு. யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாயை எல்லோரும் எடுக்க முடியாது.
யார் எடுக்கலாம்
1. மருத்துவ செலவுகள் இருப்பவர்கள்
2. உயர் கல்விக்கு பணத்தைச் செலவழிக்க இருப்பவர்கள்
3. திருமணம் போன்ற அத்தியாவசியச் செலவுகள்
4. தவிர்க்க முடியாத செலவுகள் போன்றவைகளுக்கு மட்டுமே, யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாயை எடுக்க ஆர்பிஐ அனுமதி வழங்க வாய்ப்பு இருக்கிறதாம்.
சார்ந்தவர்களுக்கு
மேலே சொன்ன காரணங்கள், வங்கியில் பணம் போட்டு இருப்பவர்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் பொருந்தும். உதாரணமாக: ஷியாம் யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் 6 லட்சம் ரூபாய் வைத்திருக்கிறார். அவர் மகன், மகள், மனைவி, பெற்றோர்கள் போன்றவர்களுக்கு மேலே சொன்ன தேவைகளில் ஏதாவது இருந்தால், அதைக் குறிப்பிட்டு 5 லட்சம் ரூபாயைக் கொடுக்கச் சொல்லி ஆர்பிஐ இடம் அனுமதி கேட்கலாம்.
சம்பளம்
உங்களுக்கான சம்பளம் யெஸ் பேங்க் வங்கிக் கணக்கு வழியாகத் தான் வருகிறது என்றால் முதலில் உங்கள் கம்பெனியிடம் பேசி வேறு வங்கிக் கணக்கில் சம்பளம் போடச் சொல்லுங்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் யெஸ் பேங்க் வழியாக சம்பளம் போடுகிறார்கள் என்றால், உங்கள் ஹெச் ஆர் டீமிடம் பேசுங்கள். இந்த ஒரு வேலையைச் செய்துவிட்டாலே பல பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடலாம்.
இ எம் ஐ
யெஸ் பேங்க் வழியாக மற்ற வங்கிகளுக்கு ஆட்டோ டெபிட் இ எம் ஐ வைத்திருக்கிறீர்களா..? முதலில் கடன் செலுத்தும் வங்கியிடம் விவரத்தைச் சொல்லுங்கள். அதோடு வேறு ஒரு வங்கி வழியாக இ எம் ஐ செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யுங்கள். அப்போது தான் இ எம் ஐ சிக்கலில் இருந்து தப்பிக்க முடியும். க்ரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படாது.
யெஸ் பேங்குக்கே கடன்
ஒருவேளை யெஸ் பேங்குக்குத் தான் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றால் பயப்படத் தேவை இல்லை. உங்கள் யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அவர்களே பிடித்தம் செய்து கொள்வார்கள். அது போக மீதம் இருக்கும் பணத்தைத் தான் 50,000 ரூபாய் பணம் எடுக்கும் வரம்புடன் ஒப்பிட்டு மீதி பணத்தை நாம் வெளியே எடுக்க முடியும்.
எஸ் ஐ பி
மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதாமாதம் பணத்தை முதலீடு செய்து வருகிறீர்களா..? உடனடியாக பணத்தை செலுத்தும் வங்கிக் கணக்கை மாற்றிக் கொள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களே முன் வந்து இருக்கின்றன. எனவே முதலீடு செய்வது மற்றும் முதலீடுகளை ரெடீம் செய்யும் வங்கிக் கணக்கை எல்லாம் இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். இது, டீமேட் கணக்கை வைத்துக் கொண்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கும் பொருந்தும்.


Click it and Unblock the Notifications