பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட காலத்தை கணக்கிடும் போது பங்குச்சந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
தற்போது 60 ஆயிரத்தை சென்செக்ஸ் நெருங்கியுள்ள நிலையில் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஒரு லட்சத்தை சென்செக்ஸ் நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் ஒரு லட்சம் என்ற மேஜிக் எண்ணை எப்போது எட்டும் என்பது குறித்து பங்குச்சந்தை நிபுணர்கள் கூறியதை தற்போது பார்ப்போம்.
சென்செக்ஸ்
கடந்த ஆண்டு சென்செக்ஸ் 62 ஆயிரம் என்ற நிலையில் இருந்தபோது அதன் பின்னர் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை காரணமாக குறைந்துகொண்டே வந்தது என்பதும் கிட்டத்தட்ட 52 ஆயிரம் வரை இறங்கிய சென்செக்ஸ் தற்போது மீண்டும் படிப்படியாக உயர்ந்து 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் ஒரு லட்சம்
இந்த நிலையில் 60 ஆயிரத்தில் இருந்து எப்போது ஒரு லட்சத்தை சென்செக்ஸ் எட்டும் என்பது குறித்து பங்குச்சந்தை நிபுணர்கள் கூறியதை தற்போது பார்ப்போம். பங்கு வர்த்தகத்தின் மூத்த நிதி மேலாளர் ஹிரேன் வேத் என்பவர் இது குறித்து கூறியபோது, 'வரும் 2025 ஆம் ஆண்டில் சென்செக்ஸ் ஒரு லட்சம் என்ற இலக்கை எட்டுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறினார். உலக அளவில் பணவீக்கம் பொருளாதார மந்த நிலை இருந்தாலும் இந்திய பங்குச்சந்தையின் ஒரு லட்சம் என்ற மேஜிக் எண்ணை விரைவில் எட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2024ல் ஒரு லட்சம்?
ஆனால் அதே நேரத்தில் சாம்கோ செக்யூரிட்டிஸின் ஆராய்ச்சித் தலைவர் அபூர்வா ஷெத் அவர்கள் கூறியபோது, 'வரும் 2024 ஆம் ஆண்டுக்கு முன்பே சென்செக்ஸ் ஒரு லட்சத்தை தொடும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் ஒவ்வொரு எட்டு வருடங்களுக்கும் ஒருமுறை சென்செக்ஸ் ஒரு அபாரமான சுழற்சியை ஏற்படுத்தும் என்றும் அந்த சுழற்சி 2024 முடிவதால் 2024 இறுதியில் ஒரு லட்சத்தை எட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளில் சென்செக்ஸ்
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 2002ஆம் ஆண்டு சென்செக்ஸ் 3000 என்ற அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் பத்து ஆண்டுகளில் அதாவது 2012 ஆம் ஆண்டு சென்செக்ஸ் 19 ஆயிரத்தை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2018ஆம் ஆண்டு 34 ஆயிரம் என்று இருந்த சென்செக்ஸ் தற்போது அடுத்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருமடங்கு அதாவது 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதாவது கடந்த 20 ஆண்டுகளில் 3000ல் இருந்து 60 ஆயிரம் வரை சென்செக்ஸ் உயர்ந்து உள்ளதை சுட்டிக் காட்டும் பங்குச்சந்தை நிபுணர்கள் இங்கிருந்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக ஒரு லட்சத்தை தொடும் என்று தெரிவித்து வருகின்றனர்.
பணவீக்கம்
பணவீக்கம், வட்டி விகிதங்கள் உயர்வு, பொருளாதார மந்த நிலை, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை இருந்தாலும் 2025 அல்லது 2026 ஆம் ஆண்டுக்குள் கண்டிப்பாக ஒரு லட்சத்தை சென்செக்ஸ் எட்டும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
2 லட்சம் எப்போது?
பிரபல பங்குச்சந்தை மதிப்பீட்டாளர் ராம்தேவ் அவர்கள் கூறியபோது இந்த ஆண்டில் இருந்து 15 சதவீத வளர்ச்சி பங்குச்சந்தையில் இருந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் அதாவது 2032ஆம் ஆண்டில் இரண்டு லட்சத்தை சென்செக்ஸ் தாண்டலாம் என்று கணித்துள்ளார்.