இந்தியாவில் எல்லாமே ஐடி துறையில் தான் முதலில் நடந்து கொண்டு இருக்கிறது. கம்பெனிக்கு எதிராக பலமாக குரல் கொடுப்பது தொடங்கி, கம்பெனி சொல்வதை அப்படியே கேட்டு நல்ல பிள்ளையாக நடப்பது வரை எல்லாமே ஐடியில் தான் சாத்தியம்.
சமீபத்தில் தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மோசடி நடப்பதாக சில ஊழியர்கள் மொட்டைக் கடிதம் எழுதினார்கள். இந்த பிரச்சனைகளை எல்லாம் இன்ஃபோசிஸ், சமீபத்தில் தான் தீர்த்தது.
இப்போது, விப்ரோ நிறுவனத்தில் ஒரு பிரச்சனை வந்திருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன.
என்ன பிரச்சனை
விப்ரோ நிறுவனத்தில் முன்பு பணியாற்றிய 5 முன்னாள் அமெரிக்க ஊழியர்கள், விப்ரோ கம்பெனிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்களாம். வழக்கில் "employment discrimination" என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்களாம். அதாவது வேலை பார்க்கும் ஊழியர்களில் பாரபட்சம் பார்ப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
என்ன பாரபட்சம்
பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் விப்ரோ நிறுவனத்தில் உலகம் முழுக்க சுமார் 1.6 லட்சம் பேர் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் 14,000 பேர் அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்களும் அடக்கம். விப்ரோ தெற்கு ஆசியர்கள் மற்றும் இந்தியர்கள் அல்லாதவர்களை பாரபட்சம் பார்ப்பதாகச் சொல்லி வழக்கு தொடுத்து இருக்கிறார்களாம். இந்த செய்தியை அவுட்லுக் இந்தியா வலைதளச் செய்திகள் உறுதி செய்கின்றன.
வழக்கு தொடுத்தவர்கள்
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த Gregory MacLean, Ardeshir Pezeshki & Rick Valles, டென்னஸி மாகாணத்தைச் சேர்ந்த James Gibbs, ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த Ronald Hemenway ஆகிய ஐந்து அமெரிக்க குடிமக்கள் & முன்னாள் விப்ரோ ஊழியர்கள் தான், விப்ரோ கம்பெனி மீது, நியூ ஜெர்ஸி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்களாம்.
எதில் பாரபட்சம்
விப்ரோ நிறுவனத்தில் ஆட்களை எடுப்பது தொடங்கி, பதவி உயர்வு கொடுப்பதில் இருந்து வேலையில் இருந்து நீக்கப்படும் நடவடிக்கைகள் வரை, எல்லா இடங்களிலும் தெற்கு ஆசியர்கள் மற்றும் தெற்கு ஆசியர்கள் அல்லாதவர்கள் என பாரபட்சம் காட்டப்படுவதாக நீதிமன்ற வழக்கில் சொல்லி இருக்கிறார்கள்.
80 சதவிகிதம்
அமெரிக்காவில் இயங்கும் விப்ரோ அலுவலகங்களில் அல்லது விப்ரோவின் பணி இடங்களில் சுமார் 80 சதவிகித பணி இடங்களுக்கு மேல் தெற்கு ஆசியர்கள் தான் பணியில் இருக்கிறார்கள் எனவும் வழக்கில் சொல்லி இருக்கிறார்களாம். இந்த பிரச்சனை குறித்து வழக்கு நடப்பதால் அதைப் பற்றி எதையும் சொல்ல முடியாது என மறுத்து இருக்கிறது விப்ரோ தரப்பு.
கோரிக்கை
வழக்கு தொடுத்த அமெரிக்க குடிமக்கள் மற்ரும் முன்னாள் விப்ரோ ஊழியர்கள் "விப்ரோ நிறுவனத்துக்கு எதிராக முழு விசாரணை (trial by jury) நடத்தப்பட வேண்டும். விப்ரோ ஆட்களை எடுப்பது, அப்தவி உயர்வு, பணி நீக்கம் போன்ற வேலை வாய்ப்பு சார்ந்த முடிவுகளை, ஒரு சரியான, பாரபட்சம் இல்லாத முறையைப் பின்பற்ற வேண்டும்" எனக் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.