தங்கம் என்பது இந்தியாவில் ஒரு முதலீடாக மட்டுமல்ல நம்முடைய அந்தஸ்தாகவும் , நம் உணர்வுகளோடு தொடர்புடைய ஒரு விஷயமாகவும் இருக்கிறது. குழந்தைக்கு முதன் முதலில் போடப்படும் காதணியில் தொடங்கி நம் வாழ்வின் அனைத்து விசேஷங்களிலும் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
தங்கம் ஒரு அவசர பண தேவைக்கு அடகு வைக்க பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாகவும் பார்க்கப்படுகிறது, தங்கத்திற்கும் இந்தியர்களுக்கும் இடையே உணர்வு ரீதியான ஒரு பிணைப்பு பாரம்பரியமாகவே நீடித்து வருகிறது, குறிப்பாக தங்க நகைகள் ஒரு குடும்பத்தின் அந்தஸ்தை நிர்ணயம் செய்யக்கூடிய விஷயமாக இருக்கிறது. பொதுவாகவே தங்கத்தை நாம் நாணயமாகவும் கட்டிகளாகவும் வாங்குவதை விட நகையாக வாங்கும்போது கூடுதல் தொகையை வழங்க வேண்டி இருக்கும்.

தங்கத்தின் மதிப்போடு சேர்ந்து ஜிஎஸ்டி மட்டுமில்லாமல் செய்கூலி சேதாரம் என சேர்த்து நாம் பணம் செலுத்துகிறோம். தங்கத்தை நாணயம் மற்றும் கட்டிகளாக வாங்கும் போது தங்கத்தின் மதிப்பு , ஜிஎஸ்டி மட்டும் செலுத்துவோம் , செய்கூலி ஒற்றை இலக்க சதவீதத்தில் தான் இருக்கும். இதுவே நகையாக வாங்கினால் செய்கூலி சேதாரமே ஒரு கணிசமான தொகையாக வந்துவிடும்.
24 கேரட் என்பது தூய்மையான தங்கம். இதை நம்மால் நகைகளாக வடிவமைக்கவே முடியாது. தங்கத்தை நகையாக மாற்ற வேண்டுமென்றால் அத்துடன் காப்பர் உள்ளிட்ட உலோகங்களை சேர்க்க வேண்டும். அப்பொழுதுதான் நகை வடிவத்திற்கு அதனை கொண்டுவர முடியும். இதன் காரணமாக தான் 22 கேரட் மற்றும் அதற்கு கீழ் உள்ள கேரட் அளவுகளில் தங்க நகைகள் கிடைக்கின்றன.

நகை கடை நடத்துபவர்கள் தங்கத்தை கட்டிகளாக வாங்கி நகை வடிவமைப்பாளர்களிடம் கொடுத்து அவற்றை நகைகளாக மாற்றுகிறார்கள். இதற்கென பாரம்பரிய கலைகளை தெரிந்த கலைஞர்களே நகை வடிவமைப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்கள் தங்க கட்டிகளை உருக்கி அத்துடன் காப்பர் உள்ளிட்டவற்றை சேர்த்து காதணி, செயின் , வளையல் என வடிவமைக்கிறார்கள்.
சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதா?
நகை வடிவமைப்பு முற்றிலும் கலைஞர்கள் கைவினை முறையில் செய்யப்பட்டால் அதற்கான சேதாரம் என்பது அதிகமாக இருக்கும் . இதுவே மெஷின் கட் என்றால் குறைவாக இருக்கும். தங்கத்தை நகையாக மாற்றும் போது வீணாகும் தங்கத்தை தான் சேதாரம் என கூறுகிறார்கள். அதாவது ஒவ்வொரு 10 கிராம் தங்க நகை உருவாக்கத்திலும் 1 கிராம் தங்கம் சேதாரமாகி விடும் என சொல்லப்படுகிறது.
நகை விற்பனையாளர்கள் இந்த சேதாரமடையும் தங்கத்திற்கான தொகையை வாடிக்கையாளர்களான நம்மிடமே வசூல் செய்கிறார்கள். அதாவது 10 கிராம் மதிப்பிலான ஒரு தங்க சங்கிலியை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் நீங்க மொத்தம் 11 கிராம் தங்கத்திற்கு தான் கட்டணம் செலுத்துவீர்கள். அதாவது அந்த 1 கிராமுக்கான தொகையை சேதாரமாக வசூல் செய்வார்கள். இது தவிர தங்க நகைக்கான செய்கூலியும் வாடிக்கையாளர்களிடமே வசூல் செய்யப்படுகிறது. இதனால் தான் நாணயம், கட்டிகளை விட தங்க நகையின் விலை அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications