தங்கத்தை நம் நாட்டினர் விரும்பி வாங்குவதற்கான காரணம் அதன் லிக்விடிட்டி. அதாவது எப்போது வேண்டுமானாலும் தங்கத்தை மாற்றி பணம் பெறலாம். ஒன்று அதை விற்பனை செய்யலாம், இல்லையெனில் தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். இதனாலோ என்னவோ விலை ஏற்றத்திலும் சிறுக சிறுக பணம் சேர்த்து ஒவ்வொரு கிராமமாக தங்கம் வாங்கி சேமித்தனர். இன்றும் அதே தங்கம் தான் நம் நாட்டின் கடன் சந்தையை ஆக்ரமிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் எக்ஸ்பீரியன் என்ற நிறுவனம் ஒரு புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டது.
அதில் இந்தியாவில் நகைக் கடன் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்திருக்கிறது. ஒரு காலத்தில் அவசர மருத்துவச் செலவுகளோ அல்லது எதிர்பாராத பண நெருக்கடியோ ஏற்பட்டால் மட்டுமே தங்கத்தை அடகு வைத்தார்கள். ஆனால் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. தங்களுடைய தொழிலை விரிவுபடுத்துவதற்கு, பிள்ளைகளின் கல்வி செலவுக்கு, அவர்களின் திருமணத்திற்கு என எண்ணற்ற காரணங்களுக்கு தங்கத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
எக்ஸ்பீரியன் அறிக்கையின்படி 2026-ஆம் நிதியாண்டில் மற்ற கடன்களை விட நகைக்கடன் 84 சதவீதம் அதிகரித்ததாக தெரியவந்துள்ளது. அதிலும் 2023-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ரூ.6.3 லட்சம் கோடியாக இருந்த மொத்த நகை கடன் மதிப்பு.. 2026-ஆம் ஆண்டில் ரூ.19.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக அளவிலான நகை கடன் பெறப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலையும் தங்கக் கடன் அதிகரித்ததற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் நகையின் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும் போது கடன் பெறுபவர்கள் குறைந்த அளவு தங்கத்தை பிணையமாக வைத்துவிட்டு, அதிக கடனை பெற முடியும். இதுவே தங்கக் கடன் அதிகரித்ததற்கு காரணமானதாக அறிக்கை கூறுகிறது.
2023-ஆம் ஆண்டில் ஒரு நபர் கிட்டத்தட்ட 98,000 ரூபாய் வரையில் தங்க கடன் பெற்றிருப்பதாகத் தெரியவந்தது. ஆனால் 2026-ஆம் ஆண்டில் இந்த தொகை ரூ.1.96 லட்சமாக அதிகரித்துள்ளது. கடன் பெறுபவர்கள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக தங்கக் கடன் பெற்றிருக்கின்றனர்.
மக்கள் அதிகம் கடன் பெறுகின்றனர்.. அப்படியானால் அதை சரியாக மீட்கின்றனரா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் அறிக்கையில் மக்கள் நிதி நடத்தை சரியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. 90 நாட்களுக்கு மேல் தங்கக் கடன் பெற்று அதை நிலுவையில் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை இதற்கு முன்னர் 0.4 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த விகிதம் 0.2 சதவீதமாக குறைந்துள்ளது.
அதாவது மக்கள் வாங்கிய கடனை முறையாக திருப்பி வருகின்றனர் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. எப்போதும் தென்னிந்திய மக்கள் தங்கத்தை அதிகம் பயன்படுத்தி கடன் பெறுவார்கள். ஆனால் இப்போது வட இந்தியாவிலும் தங்க கடன் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம் முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளிலும் தங்கம் மூலமாக கடன் பெரும் முறை பரவலாக தொடங்கியுள்ளது. இந்த தங்க கடனால் ஒரு நன்மையும் நடந்திருக்கிறது. பெண்கள் நீண்ட காலமாக தங்கள் வீட்டு லாக்கரில் பூட்டி வைத்திருந்த தங்கத்தை தாங்கள் நடத்தும் சிறு தொழில், விவசாயம் மற்றும் பிற தொழிலுக்காக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications