2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், காலை வர்த்தகம் துவங்கும் போதே உயர்வுடன் துவங்கினாலும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரம் நெருங்கி வந்தபோது சென்செக்ஸ் சரியை துவங்கியது.
இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் முடிவடைந்த சில நிமிடங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 2000 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 500 புள்ளிகளையும் தாண்டி அதிர்ச்சி அளித்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 48,764.40 புள்ளிகள் வரையில் உயர்ந்த நிலையில், வர்த்தக முடிவில் 2,314.84 புள்ளிகள் உயர்வில் 48,600.61 புள்ளிகளை அடைந்தது. இதன் மூலம் இன்று ஒருநாளில் மட்டும் சென்செக்ஸ் சுமார் 5 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
இதேபோல் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தகம் முடியும் வரையில் தொடர்ந்து உயர்விலேயே இருந்த நிலையில் நிஃப்டி 696.50 புள்ளிகள் உயர்ந்து 14,331.10 புள்ளிகளை அடைந்துள்ளது.
இந்தத் தடாலடி உயர்வுக்கு என்ன காரணம்..?
LTCG வரி உயர்வு கணிப்புகள்
மத்திய அரசின் வரி வருமானம் பெரிய அளவில் குறைந்த நிலையில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களைக் குறிவைத்து LTCG வரி உயர்த்தப்படும் என அதிகளவில் நம்பப்பட்ட நிலையில், எவ்விதமான வரி உயர்வையும் அறிவிக்கவில்லை. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் குஷி அடைந்தனர்.
முக்கியத் துறைகளுக்குச் சலுகை
2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் விதமாக இன்று பட்ஜெட் அறிக்கையில் வீடு வசதி, கட்டுமானம், சுகாதாரம், டெக்ஸ்டைல் ஆகிய துறைகளுக்குப் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தது. இது நீண்ட காலமாக மந்தமாக இருக்கும் துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்தப் பெரிய அளவில் உதவும்.
வாராக் கடன் வங்கி
இதேபோல் இந்திய முதலீட்டுச் சந்தைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கும் இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனை தீர்க்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தனிப்பட்ட ஒரு வங்கியை உருவாக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்விரண்டும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
பட்ஜெட் எதிரொலி
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும் வர்த்தகச் சந்தை வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் அளவிற்கு இந்தப் பட்ஜெட் சிறப்பாக உள்ளது எனப் பல சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
தனிநபர் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி
கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாகத் தனிநபர் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரியில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ள நிலையில் இது அன்னிய முதலீட்டாளர்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இந்திய சந்தை மீது புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
பொதுத்துறை வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம்
2022ஆம் நிதியாண்டில் மத்திய அரசு 2 பொதுத்துறை வங்கிகளையும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் தனியார்மயமாக்கல் முடிவு செய்துள்ள வங்கித்துறை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை குறியீடு 6 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.
அன்னிய முதலீட்டு அளவு
இதேபோல் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டு அளவை 74 சதவீதம் வரையில் உயர்த்த மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், வெளிநாட்டு பென்ஷன் பண்ட் மற்றும் ஹெட்ஜ் பண்ட் முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சிறப்பு நிதியியல் அமைப்பு
மேலும் இந்தியாவில் கட்டுமான துறைக்கு முதலீடு செய்வதற்காகச் சிறப்பு நிதியியல் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிதி அமைப்பின் மூலம் மத்திய அரசு கட்டுமான திட்டங்களுக்காக மட்டும் நிதியுதவி செய்யும் ஒரு பிரத்தியேக Development Finance Institution (DFI) அமைப்பை உருவாக்க உள்ளது. இது கட்டுமான துறை சார்ந்து நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
சர்வதேச சந்தை
இவை அனைத்திற்கும் மேலாக இன்று சர்வதேச சந்தையும் லாபகரமாக இருந்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் துவக்கம் முதல் உயர்வடையச் சாதகமாக அமைந்தது.