தங்கம் வாங்குவது என்பது இந்தியர்களுக்கு வெறும் முதலீடு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. ஆனால் விண்ணைத் தொடும் தங்கம் விலையால், ஒரு சிறிய நகையை வாங்கும் போது கூட 2 லட்சம் என்ற வரம்பை மிக எளிதாக தாண்டி விடுகிறோம். தற்போது நடைமுறையில் இருக்கும் விதிகளின்படி, 2 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் பான் (PAN) மற்றும் ஆதார் சமர்ப்பிப்பது கட்டாயம். தங்க விலை இவ்வளவு உயர்ந்த பின்பும், பழைய வரம்பே நீடிப்பது நகைப்பிரியர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளது. இந்நிலையில், வரவிருக்கும் பட்ஜெட் 2026-ல் இந்த உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என நிபுணர்கள் மத்திய அரசுக்கு வலுவான கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினரின் தங்க கனவை நனவாக்குமா? நிபுணர்களின் எதிர்பார்ப்பு என்ன? விரிவாக பார்ப்போம்.

தங்கம் வாங்குவதற்கான தற்போதைய விதிமுறைகள்?
இந்தியாவில் நீங்கள் 2 லட்சத்திற்கு மேல் தங்க நகைகளோ அல்லது தங்கக் கட்டிகளோ வாங்கும் போது, உங்கள் பான் அல்லது ஆதார் எண்ணை நகைக் கடைக்காரரிடம் வழங்க வேண்டியது கட்டாயமாகும். இந்த விதியானது வருமான வரிச் சட்டம் 1962-ன் கீழ் உள்ள பிரிவு 139A மற்றும் 114B (Rule 114B) ஆகியவற்றில் இருந்து உருவானது. அதன்படி ஒரு பரிவர்த்தனை 2 லட்ச ரூபாய்க்கு அதிகமான தொகையை தங்கம் அல்லது தங்க கட்டிகளை வாங்கினால் அல்லது விற்கும்போது, அந்த உயர் மதிப்புள்ள பரிவர்த்தனைக்காக உங்கள் பான் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு இல்லாதவர்களுக்கு மாற்று வழி!
உங்களிடம் பான் கார்டு இல்லை என்றால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 138A(5)C மற்றும் விதி 114B(6)-ன் கீழ், அதற்குப் பதிலாக உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த உச்சவரம்பு வரம்புகளை அரசாங்கம் கொண்டு வந்ததற்கான பல முக்கிய காரணங்கள் உள்ளன.
கருப்பு பணப் புழக்கத்தை கட்டுப்படுத்துதல்: முன்பெல்லாம் அதிக ரொக்கப் பணத்தை வைத்து, தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போது, அந்த பணம் எங்கிருந்து வந்தது (வருமான ஆதாரம்) என்பதை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. பான்/ஆதார் விதியினால், ஒவ்வொரு பெரிய பரிவர்த்தனையும் ஒரு நபரின் வரி விவரங்களோடு இணைக்கப்படுகிறது. இதனால் கணக்கில் வராத பணத்தை கொண்டு தங்கம் வாங்குவது தடுக்கப்படுகிறது.
பணமோசடி தடுப்பு நடவடிக்கை: சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தை (உதாரணமாக லஞ்சம் அல்லது கடத்தல் பணம்) தங்கமாக மாற்றி பதுக்கி வைப்பதை தடுக்க இந்த விதி உதவுகிறது. ஒரு நபர் தனது வருமானத்திற்கு மீறி அதிக அளவில் தங்கம் வாங்கினால், வருமான வரி துறையின் மென்பொருள் அதை தானாகவே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும்.
நிதித் தடம் உருவாக்குதல்: நீங்கள் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கும் போது வழங்கப்படும் பான்/ஆதார் விவரங்கள், அந்தப் பரிவர்த்தனைக்கான ஒரு டிஜிட்டல் சாட்சியமாக மாறுகிறது. இதன் மூலம் யார், எப்போது, எவ்வளவு மதிப்புள்ள தங்கம் வாங்கினார்கள் என்பதை வரித்துறையினரால் எந்த நேரத்திலும் சரிபார்க்க முடியும்.
வரி ஏய்ப்பை தடுத்தல்: சிலர் தங்களின் வருமானத்தை குறைவாக காட்டி வரி ஏய்ப்பு செய்வார்கள். ஆனால் அதே சமயம் அதிக அளவில் தங்கம் வாங்குவார்கள். பான்/ஆதார் விவரங்களை சேகரிப்பதன் மூலம், ஒருவரின் வருமான வரித் தாக்கல் மற்றும் அவரது உண்மையான செலவு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்க அரசுக்கு முடிகிறது.
முக்கிய கோரிக்கை?
பான் கார்டு இல்லாமல் தங்கம் வாங்குவதற்கான தற்போதைய வரம்பை, அரசாங்கம் மீண்டும் பரிசீலனை செய்து சீரமைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. தற்போதுள்ள 2 லட்சம் ரூபாய் என்ற பண வரம்பை கணிசமாக அதிகரிக்க வேண்டும். இந்த வரம்பை நிலையான ஒன்றாக வைக்காமல், அன்றைய தங்கத்தின் சந்தை விலை அல்லது பணவீக்க குறியீட்டுடன் இணைத்து மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி, ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் மிகக் குறைந்த அளவு (உதாரணமாக 4-5 சவரன்) நகை வாங்கினாலே 2 லட்சம் ரூபாய் என்ற வரம்பை எளிதாக எட்டிவிடுகிறது. இது 2016-ல் இந்த விதி கொண்டுவரப்பட்ட போது இருந்த சூழலை விட முற்றிலும் மாறுபட்டது. எனவே சாதாரண பொது மக்களின் மீதான ஆவண சுமையை குறைக்க இந்த மாற்றம் அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications