பணவீக்கம் என்ற ஒன்று உலக நாடுகளை மட்டும் அல்லாமல் பெரும் பணக்காரர்களையும் பெரிய அளவில் பாதித்து வருகிறது. கொரோனா தொற்று காலத்தில் பெரும் பணக்காரர்கள் அதிகளவில் வருமானத்தை பெற்று சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்தது.
ஆனால் பணவீக்கம் மற்றும் மந்தமான பொருளாதாரம் காரணமாக தற்போது பெரும் பணக்காரர்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதில் இந்திய பணக்காரர்களும் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு உள்ளனர். குறிப்பாக இந்திய ஐடி துறையின் இரு முக்கிய தலைவர்கள் வெறும் 5 மாத காலத்தில் 1.17 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
ஐடி துறை
உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கு பின்பு தங்களது தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மறுசீரமைப்பு, மேம்பாடு, புதுப்பிப்பு பணிகளை செய்த காரணத்தால் முன் எப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சியைக் கண்ட தகவல் தொழில்நுட்பத் துறை, இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
பொருளாதார மந்த நிலை
பணவீக்கம் மட்டும் அல்லாமல் ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் ஏற்பட்ட வர்த்தக பாதிப்புகள் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்த நிலையில் உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகள் 2022 முதல் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதில் கூகுள் முதல் இந்தியாவின் விப்ரோ வரையில் அடங்கும்.
நாஸ்டாக் முதல் நிஃப்டி வரை
நாஸ்டாக் தொழில்நுட்பத் துறை குறியீடு, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 24 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல் இந்தியாவின் நிஃப்டி ஐடி குறியீடு 22 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இந்த சரிவில் இந்தியாவின் பல முன்னணி ஐடி பங்குள் சரிந்துள்ளது.
விப்ரோ - அசிம் பிரேம்ஜி
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய தலைவரும், நாட்டின் முன்னணி நன்கொடையாளருமான அசிம் பிரேம்ஜி-யின் சொத்து மதிப்பில் பெருமளவில் விப்ரோ பங்குகள் இடம்பெறுகிறது. இந்த நிலையில் விப்ரோ பங்குசரிவு மூலம் ஆசிம் பிரேம்ஜி 2022ஆம் ஆண்டின் முதல் 5 மாதத்தில் மட்டும் சுமார் 12 பில்லியன் டாலர் அளவிலான இழப்பை எதிர்கொண்டுள்ளார்.
ஹெச்சிஎல் டெக் - ஷிவ் நாடார்
இதேபோல் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் நிறுவனரும் தலைவருமான ஷிவ் நாடார், இதே 5 மாத காலகட்டத்தில் கிட்டத்தட்ட 7 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார. ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சந்தை மூலதனம் இக்காலக்கட்டத்தில் 21%க்கும் அதிகமாக குறைந்துள்ளது.
5 மாத சரிவு
கடந்த 5 மாதத்தில் டிசிஎஸ் நிறுவனம் பங்கு மதிப்பு சரிவால் 10 சதவீத சந்தை மதிப்பை இழந்துள்ளது. இதேபோல் இன்போசிஸ் 20 சதவீதம், ஹெச்சிஎல் 21 சதவீதம், விப்ரோ 34 சதவீதம், டெக் மஹிந்திரா 36 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
1,47,459 கோடி ரூபாய் இழப்பு
இதன் படி கடந்த 5 மாதத்தில் அசிம் பிரேம்ஜி 12 பில்லியன் டாலர், ஷிவ் நாடார் 7 பில்லியன் டாலர் என மொத்தம் 19 பில்லியன் டாலர் அதாவது 1,47,459 கோடி ரூபாய் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications