டெல்லி: நடப்பு நிதியாண்டில் மறக்க முடியாத பல நிகழ்வுகள் இருந்தாலும், பிப்ரவரி மாதத்தில் வெளியான தங்கம் சுரங்கம் பற்றிய செய்திகள் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. ஆனால் அந்த சந்தோஷம் அதிக நாள் நீட்டிக்கவில்லை.
நடப்பு ஆண்டின் பிப்ரவரி 22ம் தேதியன்று உத்திரபிரதேசத்தின் இரு இடங்களில் 3,350 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், நாட்டின் கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகமாகும். உண்மையில் இது கிடைத்தால் இந்தியாவின் பஞ்சமே தீர்ந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு
இது குறித்து வெளியான அறிக்கையில், 20 ஆண்டுகள் தேடலுக்கு பிறகு மத்திய மற்றும் மாநில சுரங்கத்துறை இயக்குநரகம் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் சோன்பத்ரா மற்றும் ஹர்தி ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சோன்பத்ராவில் 2,700 டன் மற்றும் ஹர்தியில் 650 டன் என மொத்தம் 3,350 டன் தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டது.
ஐந்து மடங்கு அதிகம்
இது இந்தியாவின் மொத்த கையிருப்புத் தங்கத்தின் அளவை விட ஐந்து மடங்கு அதிகமாகும். ஆக இந்த மதிப்புமிக்க தங்க சுரங்கத்தை ஏலம் விட அரசும் முடிவு செய்தது. இதற்காக 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இணைய வழி ஏல
நடவடிக்கைகள் முதல் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த சுரங்கத்தில் தங்கம் மட்டும் அல்ல, யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் கூட இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
பல ஆயிரம் பேருக்கு வாய்ப்பளிக்கும்
உத்திரபிரதேசத்தின் புண்டேல்கண்ட் மற்றும் விந்தியன் மாவட்டங்களில் தங்கம், வைரம், பிளாட்டினம், சுண்ணாம்பு, கிரானைட், பாஸ்பேட், குவார்ட்ஸ் மற்றும் சீனா களிமண் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவ்வாறு பரந்த சுரங்கங்கள் மற்றும் பிற கனிமங்களை ஆராய்வது மாநிலத்தின் வருவாய்க்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். மேலும் வேலை வாய்ப்புகளையும் ஊக்குவிக்கும், என்றெல்லாம் கனவில் கோட்டை கட்டப்பட்டது.
மற்ற நாடுகளில் தங்கம் இருப்பு
இந்த நிலையில் உலக தங்கக் கூட்டமைப்பின் படி இந்தியாவிடம் தற்போது 626 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. இது உலகளவு தங்கத்தின் அளவில் 6.6% ஆகும். அதிகபட்சமாக அமெரிக்காவிடம் 8,133.5 டன் தங்கம் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனியிடம் 3,366 டன், இத்தாலியிடம் 2,451.8 டன், பிரான்ஸிடம் 2,436 டன், ரஷியாவிடம் 2,241.9 டன், சீனாவிடம் 1,948.3 டன், சுவிட்ஸர்லாந்திடம் 1,040 டன் மற்றும் ஜப்பானிடம் 765.2 தங்கம் கையிருப்பு உள்ளது.
அது உண்மையில்லை
மேற்கண்டவாறு தங்கம் சுரங்கங்கள் இருப்பதாக வெளியான நிலையில், இரண்டு நாட்கள் கழித்து அது உண்மையில்லை என்று ஜிஎஸ்ஐ கூறியது. தங்கம் இருப்பது உண்மை தான். ஆனால் எதிர்பார்த்ததை போல 3,350 டன் அளவில் தங்கம் இல்லை. வெறும் 160 கிலோ தங்கம் இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அதுவும் கூட தோராயமான அறிக்கை என்பதால், அதனையும் முழுக்க பிரித்தால் தானே தெரியும். முடிவில் எவ்வளவு தங்கம் கிடைக்குமென. ஆரம்பத்தில் தங்க மலையே கிடைத்துள்ளதாக நினைத்த மக்களுக்கு, முடிவில் ஏமாற்றமே மிஞ்சியது.