கடந்த சில வாரங்களாகவே மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்ட ஒரு பெரிய விஷயம் யெஸ் பேங்க் தான். நிதி நெருக்கடி, வாராக்கடன், நிர்வாகக் சீர்கேடு உள்ளிட்ட பல பிரச்சனைகளில், இவ்வங்கியினை தனது நேரடி கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தது ரிசர்வ் வங்கி.
இதுவே இவ்வங்கிக்கு பெருத்த அடியாக இருந்து வந்தது. இது ஒரு புறம் எனில் இவ்வங்கியின் தலைவர் ரானா கபூர் இவ்வங்கியில் சில ஊழல்களில் ஈடுப்பட்டிருப்பதாக தெரிய வந்த பின்னர், இவரது வீடு மற்றும் நெருக்கமான சில இடங்களில் அமலாக்க பிரிவு சோதனை நடத்தியது. அப்போது ரானா கபூரை கைதும் செய்தது.
அந்த நிலையில் யெஸ் பேங்கில் 50,000 ரூபாய்க்கு மேல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாது என அதிரடியான பல நடவடிக்கைகளையும் கொண்டு வந்தது ஆர்பிஐ.
நஷ்டம் தான்
இப்படி பல பிரச்சனைகளை அடுத்தடுத்து எதிர்கொண்ட வாடிக்கையாளர்களுக்கும் முதலீட்டாளர்களும் மீண்டும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது யெஸ் பேங்க். அது அவ்வங்கியின் டிசம்பர் காலாண்டு முடிவு தான். சொல்லப்போனால் கடந்த டிசம்பர் காலாண்டில் 18,564 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தினை கண்டுள்ளது.
முதலீடு, செய்கிறோம்
இதில் வேடிக்கை என்னவெனில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்.டிஎஃப்.சி உள்ளிட்ட சில தனியார் வங்கிகளும், முன்னணி பொதுத்துறை வங்கியும் முதலீடு செய்யலாம் என முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் டிசம்பர் 2019 காலாண்டில் இவ்வங்கி 1,001 கோடி ரூபாய் நிகர லாபத்தில் இருந்துள்ளது. இதுவே டிசம்பர் 2018ல் 600 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரலாறு காணாத நஷ்டம்
ஆக இவ்வங்கி வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பர் காலாண்டில் நஷ்டம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவ்வங்கியின் மொத்த வாராக்கடன் அளவு 40,709.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு வெறும் 5,158.6 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே நிகர வாராக்கடன் அளவு டிசம்பர் காலண்டி;ல் மட்டும் 11,117.72 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
காரணம் இது தான்?
இது முந்தைய ஆண்டில் டிசம்பர் 2019ல் நிகர வாரக்கடன் அளவு 2,876.3 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் இந்த காலகட்டத்தில் வங்கியில் டெபாசிட் தொகை மிகவும் குறைந்தது என்றும், இதே காலத்தில் வாராக்கடன் அளவும் மிகவும் அதிகரித்தது என்றும் கூறப்படுகிறது. அதோடு இவ்வங்கியில் கடன் வழங்கும் தரக்குறியீடு குறைப்பு என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இவ்வங்கி பெருத்த அடி வாங்கியுள்ளது.
முதலீடு செய்ய ஆர்வம்
இந்த நிலையில் யெஸ் பேங்கில் முதலீடு செய்ய பல தனியார் வங்கிகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. யெஸ் பேங்கில் 1.000 கோடி ரூபாய் ஐசிஐசிஐ முதலீடு செய்யப்போவதாகவும், இதே ஆக்ஸிஸ் பேங்க் 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், கோட்டக் மகேந்திரா வங்கி 500 கோடி ரூபாய் முதலீடு செய்யபோவதாகவும் கூறப்படுகிறது.
எஸ்பிஐயும் முதலீடு
இதே போல் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யெஸ் வங்கியில் ரூ.7,250 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் பெற்றுள்ளது. இதற்கான ஒப்புதலை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் உயர்மட்டக் குழு இன்று (மார்ச் 13) வழங்கியுள்ளது. இந்த நிலையில் யெஸ் பேங்க் ஊழியர்களுக்கும் ஒரு வருட காலம் வேலையை தொடர உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
கிளைகள் வழக்கம் போல் செயல்படும்
அதே போல இவ்வங்கியின் அனைத்து கிளைகளும் வழக்கம் போல தொடரும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் எஸ்பிஐயின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரசாந்த் குமாரை நியமித்துள்ளது. கடன் வழங்குபவர் மீதான தடை நீக்கப்பட்ட பின்னர் குமார் தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.