டெல்லி: ஒரு காலத்தில் பில்லியனர்களில் ஒருவரான அனில் அம்பானியை பற்றி தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு மடமடவென வளர்ந்து அதே வேகத்தில் சரிந்தவர்.
அன்று பில்லியனர் இன்று லட்சாதிபதி என்ற நிலையில், இவரின் பேர் சொல்லாத வங்கிகள் இருக்க முடியாது என்று கூறலாம். ஏனெனில் தன்னால் முடிந்த மட்டில் பல வங்கிகளில் கடன் வாங்கி திவால் நிலைக்கு தள்ளப்பட்டவர்.
இந்த நிலையில் யெஸ் வங்கி பிரச்சனை பற்றி ஏற்கனவே பலர் அறிந்திருந்தாலும், யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அமலாக்க இயக்குனரகம் பலருக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
அனில் அம்பானிக்கு நோட்டீஸ்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி. நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் யெஸ் வங்கியிடம் 12,800 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில் அனில் அம்பானி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு வியாழக்கிழமையன்று ஆஜராகி வாக்கு மூலமும் அளித்துள்ளார். அப்போது கடன் பற்றிய விவரங்கள் கேட்டபோது, தனக்கு முழுமையான விவரம் தெரியவில்லை. ஆக கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் அதனை முழுமையாக கொடுப்பதாகவும் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சட்ட விரோதமாக ஆதாயம்
பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த யெஸ் வங்கியினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அதனை தற்போது பல வங்கிகளில் முதலீடு செய்து தற்போது வழக்கம் போல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதே சமயம் இவ்வங்கியில் பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதற்காக ரானா கபூர் மற்றும் அவரது குடும்பத்தினரும் 4,300 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோதமாக ஆதாயம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நேரில் ஆஜராக சம்மன்
இந்த நிலையில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு, விதிகளை மீறி யெஸ் வங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து யெஸ் வங்கியில் கடன் பெற்ற ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி மற்றும் பல்வேறு தொழில் நிறுவன அதிபர்களும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
நேரில் ஆஜர்
இதன்படி மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி வியாழக்கிழமையன்று காலையில் 8.30 மணியளவில் நேரில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்ததாகவும், காலையில் 8.30 மணிக்கு ஆஜரானவர், மாலை ஆறு மணிக்கு தான் அலுவலகத்தினை விட்டு வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது.
எவ்வளவு கடன்?
மேலும் அனில் அம்பானியிடம் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அனில் அம்பானியின் 9 நிறுவனங்கள் பண நெருக்கடிக்கு ஆளான யெஸ் வங்கியில் இருந்து சுமார் 12,800 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அனில் அம்பானி தான் கடன் வாங்கியது உண்மை தான்.
திரும்ப கடனை செலுத்துவேன்
தனது சொத்துக்களை விற்று பணமாக்குதல் மூலம் அந்தக் கடன் களை திரும்ப செலுத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அம்பானி ரிலையன்ஸ் குழுமம் தொடர்ந்து அனைத்து அதிகாரிகளுக்கும் தனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
யாருக்கெல்லாம் சம்மன்
இதேபோல் எசெல் குழும அதிபர் சுபாஷ் சந்திரா, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் ஆகியோருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இந்தியாபுல்ஸ் நிறுவனர் சமீர் கெலாட் அமலாக்கத்துறைக்கு அனுப்பிய தகவலில், தான் வெளிநாட்டில் இருப்பதால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தன்னால் இந்தியா வர இயலவில்லை கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.