யெஸ் பேங்க் என்று சொன்ன உடன் அந்த 50,000 ரூபாய் கட்டுப்பாடு தான் முதலில் நினைவுக்கு வரும்.
அந்த அளவுக்கு யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களும் சரி, யெஸ் பேங்க் அபிமானிகளும் சரி, பயந்து போய் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக யெஸ் பேங்க் தலைப்புச் செய்தி ஆகும் அளவுக்கு வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இதுவரை பேசிய நெகட்டிவ் செய்திகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது இந்த யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள், விரைவில் தங்கள் டெபாசிட் பணத்தை எடுக்கலாம் என ஒரு ஆறுதல் செய்தி சொல்லும் அளவுக்கு ஒரு நல்ல காரியம் நடந்து இருக்கிறது. அதை கவனிப்போம்.
முதலீடுகள்
கிட்டத்தட்ட திவால் ஆகும் நிலையில் இருக்கும் யெஸ் பேங்கில் முதலீடு செய்ய சில பேர் தயாராக இருக்கிறார்களாம். இவர்கள் மொத்தம் 10,650 கோடி ரூபாயை செலவழித்து, யெஸ் பேங்கின் பங்குகளை வாங்கிக் குவிக்க இருக்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா..?
எஸ்பிஐ
யெஸ் பேங்கில் முதலீடு செய்ய இருக்கும் முதலாவது பெரிய நிறுவனம், இந்தியாவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கி மட்டும் சுமாராக 7,250 கோடி ரூபாயை முதலீடு செய்யப் போகிறார்களாம். இந்த டீலை Executive Committee of Central Board (ECCB) அமைப்பும் அனுமதி அளித்து இருக்கிறது.
பங்குகள்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, 725 கோடி பங்குகளை வாங்க இருக்கிறார்களாம். ஒரு யெஸ் பேங்க் பங்கின் விலை 10 ரூபாய் மேனிக்கு வாங்க இருக்கிறார்களாம். இந்த 725 கோடி பங்கு டீல் முடிந்த பின் கூட, ஆர்பிஐ சொன்னது போல, யெஸ் பேங்கின் மொத்த பங்கில் 49 சதவிகித பங்குகள் தான் எஸ்பிஐ வசம் இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறது எஸ்பிஐ.
பந்தன் பேங்க்
அந்த இரண்டாவது நபர் பந்தன் பேங்க். மும்பையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தனியார் வங்கி இது. இந்த தனியார் வங்கி பந்தன் பேங்கில் 300 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அந்த நிறுவனமே சொல்லி இருக்கிறது. இதன் மூலம் ஒரு யெஸ் பேங்க் பங்கு விலை 10 ரூபாய் மேனிக்கு 30 கோடி பங்குகளை வாங்க இருக்கிறார்களாம்.
மற்றவர்கள்
வங்கித் துறையின் ஜாம்பவான்களாக இருக்கும்
ஹெச் டி எஃப் சி வங்கி - 1,000 கோடி ரூபாய்,
ஐ சி ஐ சி ஐ வங்கி - 1,000 கோடி ரூபாய்
ஆக்ஸிஸ் வங்கி - 600 கோடி ரூபாய்
கோட்டக் மஹிந்திரா வங்கி - 500 கோடி ரூபாய் என பல வங்கிகளில் தங்கள் கஜானாவில் இருந்து காசை அள்ளி இறைக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஜாலியில் யெஸ் பேங்க்
ஆக திவாலாகும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த யெஸ் பேங்க், தற்போது 10,650 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஆள் பிடித்து இருக்கிறது ஆர்பிஐ. இனியாவது யெஸ் பேங்க் சூதானமாக ஒழுங்காகத் தொழில் செய்தால் நன்றாக இருக்கும். நேர்மையாகவும் சிறப்பாகவும் தொழில் செய்வார்கள் என்று நம்புவோம்.