யெஸ் பேங்க் இன்று மாலை 6 மணி முதல் வழக்கம் போல செயல்படத் தொடங்கும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
யெஸ் பேங்கில் பணத்தை டெபாசிட் செய்து இருப்பவர்கள், இன்று முதல் வழக்கம் போல எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
அதோடு, யெஸ் பேங்கின் பங்கு விலைகளும் சக்கை போடு போடத் தொடங்கி இருக்கின்றன.
கொஞ்சம் வரலாறு
யெஸ் பேங்கின் முன்னாள் தலைவர் ரானா கபூர், கண்டவர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்து வங்கியின் வாரா கடனை அதிகரிக்கச் செய்தது, வந்த வாரா கடனை முறையாக கணக்கு காட்டாமல் ஏமாற்றியது, மேற்கொண்டு கடன் கொடுக்க போதுமான பணம் இல்லாமல் யெஸ் பேங்க் தவித்தது, அதனால் மார்ச் 05, 2020 அன்று யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என கட்டுப்பாடுகளை விதித்தை எல்லாம் நாம் பார்த்தோம்.
பங்கு விலை
மறு பக்கம் இந்த செய்திகள் வர வர யெஸ் பேங்கின் பங்கு விலை தரை தட்டத் தொடங்கியது. கடந்த 20-08-2018 அன்று 404 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருந்த யெஸ் பேங்க் பங்கு விலை, கடந்த மார்ச் 06, 2020 அன்று குறைந்தபட்சமாக 5.55 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. ஆனால் மார்ச் 06, 2020-க்குப் பிறகு மெல்ல யெஸ் பேங்க் பங்கு விலை தேறத் தொடங்கிவிட்டது. என்ன காரணம்..?
என்ன காரணம்
யெஸ் பேங்கில், இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மட்டும் சுமாராக 7,250 கோடி ரூபாயை முதலீடு செய்யப் போகிறார்கள். அதோடு ஹெச் டி எஃப் சி, ஐ சி ஐ சி ஐ, பந்தன் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் என பல முன்னணி வங்கிகளும் பல கோடி ரூபாயை முதலீடு செய்யப் போகிறார்களாம். எனவே யெஸ் பேங்குக்கு சுமாராக 10,650 கோடி ரூபாய் முதலீடு கிடைத்து இருக்கிறது.
எஸ்பிஐ 49 சதவிகிதம்
மிக முக்கியமாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தான், பெரிய அளவிலான பங்குகளை தன் கைவசம் வைத்துக் கொள்ளப் போகிறது. அதிகபட்சமாக யெஸ் பேங்கின் மொத்த பங்குகளில், 49 சதவிகிதம் வரை வைத்துக் கொள்ள எஸ்பிஐ-க்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
விலை ஏற்றம்
சரி... யெஸ் பேங்கின் பங்கு விலை, எவ்வளவு விலை அதிகரித்து இருக்கிறது..? 50 %... 100%... இல்லவே இல்லை. அதிகபட்சமாக 1,640 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறது. யெஸ் பேங்கின், அந்த விலை ஏற்றங்களைத் தான் ஒவ்வொன்றாகப் பார்க்கப் போகிறோம்.
மார்ச் 06
கடந்த மார்ச் 06, 2020 அன்று குறைந்தபட்சமாக யெஸ் பேங்க் பங்கின் விலை 5.55 ரூபாய். அந்த நேரத்தில் துணிந்து யெஸ் பேங்கின் பங்குகளை வாங்கி, இன்றைய உச்ச விலையான 87.95 ரூபாய்க்கு விற்று இருந்தால் சுமார் 1,640 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். அதாவது 1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் 16.4 லட்சம் லாபம் பார்த்து இருக்கலாம்.
மார்ச் 06 -18
இதெல்லாம் பெரிய பெரிய பங்குச் சந்தை வியாபாரிகளுக்கு வேண்டுமானால் ஒத்து வரும், நமக்கு செட் ஆகுமா..? என்கிறீர்களா. சரி மார்ச் 06 அன்றைய குளோசிங் விலையான 16.20 ரூபாய்க்கு யெஸ் பேங்க் பங்குகளை வாங்குகி, தற்போது யெஸ் பேங்க் பங்கின் விலை சுமாராக 71 ரூபாய்க்கு விற்றால் கூட சுமார் 338 சதவிகிதம் லாபம் சம்பாதித்து இருக்கலாம். அதாவது 1 லட்சம் ரூபாய் போட்டு இருந்தால் சுமார் 3.38 லட்சம் லாபம் பார்த்து இருக்கலாம்.
நிதானமான தேர்வு
இது கூட செல்லாது. பதட்டமான காலத்தில் எப்படி முதலீடு செய்வது என்கிறீர்களா..? சரி, மார்ச் 16, 2020 காலத்தில் யார் எல்லாம் யெஸ் பேங்கில் முதலீடு செய்யப் போகிறார்கள் என்கிற விஷயம் வரை தெளிவாக வெளியே வந்துவிட்டது. eனவே மார்ச் 16, 2020 அன்று காலை, 23.15 ரூபாய்க்கு யெஸ் பேங்கின் பங்குகளை வாங்கி இருக்கலாம்.
நல்ல லாபம்
23.15 ரூபாய்க்கு பங்குகளை வாங்கி, இன்று சுமாராக 71 ரூபாய்க்கு விற்றால் கூட 206 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். அதாவது 1 லட்சம் போட்டு இருந்தால் சுமார் 3.06 லட்சம் லாபம் பார்த்து இருக்கலாம். இதற்கு மேல் ஏதாவது யெஸ் பேங்கில் லாபம் பார்க்க வாய்ப்பு இருக்கிறதால், அதை கண்டு பிடித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.