யெஸ் பேங்க் கடந்த ஆகஸ்ட் 2018 வரை ஒரு நல்ல வங்கி. இந்த வங்கியின் நிர்வாகத்தை நம்பி, இந்த நிறுவன பங்குகளில் பணம் போட்டால் போட்ட பணம் தானாக வரும் என நம்பிக் கொண்டு இருந்தார்கள்.
இப்படி நம்பியது ஏதோ சாதாரண மக்கள் மட்டும் அல்ல. பெரிய பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களே கூட நம்பி, இந்த நிறுவனத்தின் பங்குகளில் பணத்தைப் போட்டு இருந்தார்கள்.
ஆனால் இப்போதைய நிலையில் யெஸ் பேங்கின் பங்கைப் பார்த்தாலே தெறித்து ஓடும் அளவுக்கு மாறி இருக்கிறது நிலை.
யெஸ் பேங்க் நிலை 2015
மார்ச் 2015-ம் ஆண்டு நிலவரப்படி, யெஸ் பேங்க் 313 கோடி ரூபாய் தான் தோராய வாராக் கடனாக இருந்தது. அதாவது யெஸ் பேங்க் கொடுத்த மொத்த கடனில் 0.41 சதவிகிதம் தான் தோராய வாராக் கடன். ஆனால் இந்த நிலை கடந்த மார்ச் 2018, மார்ச் 2019-ல் தலை கீழாக மாறிவிட்டது.
தற்போது
மார்ச் 2019 நிலவரப்படி யெஸ் பேங்கின் தோராய வாராக் கடன் 7,882 கோடியாக அதிகரித்து விட்டது. அதாவது யெஸ் பேங்க் கொடுத்த ஒட்டு மொத்த கடனில் 3.22 % கடன்கள் தோராய வாராக் கடன்கள் பட்டியலில் இருக்கின்றன. எனவே தான் பங்கு விலை தரை தட்டத் தொடங்கியது.
முதல் சரிவு
கடந்த ஆகஸ்ட் 20, 2018 அன்று யெஸ் பேங்க் பங்கு விலை 404 ரூபாயைத் தொட்டது. அது தான் யெஸ் பேங்கின் அதிகபட்ச விலை. அதற்குப் பின் சரிவு தான். இன்று அதே யெஸ் பேங்க் பங்கு விலை சுமாராக 40 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
அச்சம்
இன்று யெஸ் பேங்க் நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சப்படுகிறார்கள். சமீபத்தில் யெஸ் பேங்கின் மோசமான நிர்வாகத்தினால், சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் இருந்து யெஸ் பேங்க் நீக்கபட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் இப்படி யெஸ் பேங்க் எத்தனை சிக்கல்களைச் சந்திக்கப் போகிறதோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications